தென்மேற்கு பருவ மழை எதிரொலி கபினியில் 25,000 கனஅடி நீர் திறப்பு
மேட்டூர், தென்மேற்கு பருவமழையால் நீர்வரத்து அதிகரித்து, கபினி அணையில் இருந்து, வினாடிக்கு, 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.
கர்நாடகாவின் கபினி, ேஹரங்கி அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அதற்கேற்ப நேற்று முன்தினம் மதியம் வினாடிக்கு, 20,168 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து, நேற்று மதியம், 21,545 கனஅடியாக அதிகரித்தது. இதற்கேற்ப வினாடிக்கு, 5,000 கனஅடியாக இருந்த அணை நீர்திறப்பு, நேற்று முன்தினம் மதியம், 10,000 கனஅடி, நேற்று மதியம், 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் திறக்கப்பட்ட, 10,000 கனஅடி நீர், மேட்டூர் அணைக்கு இன்று மாலையும், 25,000 கனஅடி நீர், நாளை மாலையும் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்பதால், அதற்கேற்ப மேட்டூர் அணை
நீர்வரத்து அதிகரிக்கும்.
மேலும் நேற்று முன்தினம் வினாடிக்கு, 5,825 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 6,040 கனஅடியாக அதிகரித்தது. வினாடிக்கு, 10,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர்திறப்பு, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம், 114.44 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 114.13 அடியாக சரிந்தது. வரும் நாட்களில் அணை நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.