ஐஸ்கிரீம் கடையில் அதிகாரிகள் சோதனை

போத்தனூர் : கோவை, கரும்புக்கடை, சாரமேடு சாலை, பிஸ்மி நகரை சேர்ந்தவர் சிராஜுதீன், 39; டூ வீலர் மெக்கானிக். மூன்று நாட்களுக்கு முன் இவர், போத்தனூர் மெயின் ரோட்டில், மைல்கல் பஸ் ஸ்டாப் அருகேயுள்ள, பிரபல ஐஸ்கிரீம் நிறுவனத்தின் விற்பனை மையத்திற்கு சென்று, ஆறு மலாய் குல்பி மற்றும் ஐஸ்கிரீம்கள் வாங்கினார்.

தொடர்ந்து வீட்டில் இவரது எட்டாவது பயிலும், 13 வயது மகள் குல்பி சாப்பிட்டார். சிறிது சாப்பிட்ட பின், அதனுள் ஈ இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அதனை எடுத்துக்கொண்டு, ஐஸ்கிரீம் கடைக்கு சென்ற சிராஜுதீன், அங்கிருந்த அஷ்வின் என்பவரிடம் இதுகுறித்து கூறினார். அவர், ஈ இருந்த குல்பியை பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா, ஐஸ்கிரீம் கடைக்கு சென்று, சோதனை நடத்தினார்.

அவர் கூறுகையில், குல்பியில் ஈ இருந்த தகவல், புகைப்படத்துடன் வாட்ஸ் ஆப் வாயிலாக எனக்கு வந்தது. குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தப்பட்டது. குல்பி, சேலத்தில் தயாரிக்கப்பட்டதும், இவர்கள் விற்பனை மட்டுமே செய்வதும் தெரிந்தது.

விற்பனை செய்வதற்கான, அனைத்து உரிமங்களும் வைத்துள்ளனர். சேலத்திலுள்ள தயாரிப்பு மையத்தில், குல்பியில் ஈ எவ்வாறு வந்தது என, ஒரு வாரத்திற்குள் விளக்கம் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement