அடுத்த தலைவராக யாருக்கு வாய்ப்பு?

டெஹ்ரான்: ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆட்சி கவிழ்க்கப்பட்டாலோ அல்லது இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் அவர் கொல்லப்பட்டாலோ, அவருக்கு பின் யார் அரசின் தலைவராக பொறுப்பேற்க அதிக வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மொஜ்தபா கமேனி : கமேனியின் இரண்டாவது மகன். ஈரான் துணை ராணுவமான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் செல்வாக்குமிக்க மத தலைவர்களுடன் இவருக்கு வலுவான தொடர்பு உண்டு. வாரிசு ஆட்சிக்கு எதிர்ப்பு இருந்தாலும், தலைமை பொறுப்புக்கு இவரை தயார்ப்படுத்தி வந்ததாக உளவுத் தகவல் உள்ளது. மொஜ்தபாவின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் தந்தையின் ஆதரவு இவரின் முக்கிய பலம்.
அலிரெஸா அராபி : மூத்த மதகுரு. நிபுணர் சபையின் துணைத் தலைவர். குவாமில் உள்ள ஷியா முஸ்லிம் மதப்பள்ளியின் தலைவர். உயரிய தலைவர் பதவிக்கான வேட்பாளரை அனுமதிக்கும் கார்டியன் கவுன்சில் உறுப்பினர். ஈரானின் மத மற்றும் அரசியல் அதிகார மையங்களுடன் இவருக்கு ஆழமான தொடர்பு உள்ளது.
ஹாஷிம் ஹொசைனி புஷேஹ்ரி : நிபுணர் சபையின் முதல் துணைத் தலைவர். குவாம் மதப்பள்ளியின் கல்வி சங்க தலைவர். குவாமில் நடக்கும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான இமாம். இந்த பதவிக்கு இவரை கமேனியே நேரடியாக நியமித்தார். மத மற்றும் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்கவர்.
ரெசா பஹ்லவி: ஈரானின் கடைசி மன்னர் முகமது ரெசா பஹ்லவியின் மகன். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் நாடு கடந்து அமெரிக்காவில் வாழ்கிறார். மதச்சார்பற்ற, ஜனநாயக ஈரானை ஆதரிக்கிறார். மன்னராட்சியை மீண்டும் கொண்டுவருவதை விட, மக்களின் ஓட்டெடுப்பு வாயிலாக ஆட்சி மாற்றத்தை வலியுறுத்துகிறார். ஈரான் மக்களிடையே இவருக்கு மிகுந்த செல்வாக்கு இருப்பதாக கருத்துக் கணிப்புகளும் வெளியாகியுள்ளன.
