வெள்ளலுாரில் ரோடு படுமோசம் பொறுமையிழந்த மக்கள் மறியல்

கோவை : வெள்ளலுார் பேரூராட்சி எட்டாவது வார்டில் ரோடு படுமோசமாக இருந்ததால், மழைக்கு சேறும் சகதியுமாகியது. அதனால், அவதிப்பட்ட அப்பகுதி மக்கள், பட்டணம் ரோட்டில் மறியல் போராட்டம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளலுார் பேரூராட்சி பகுதியில், அனைத்து வார்டுகளிலும் ரோட்டின் மையப் பகுதியில் 'அம்ரூட்' திட்டத்தில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி, ரோட்டின் இருபுறமும் காஸ் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

குழாய் பதித்தபின், இவ்விரு திட்டங்களின் கீழ், வீடு வீடாக இணைப்பு வழங்கப்படுகிறது. இதன்பின், காஸ் குழாயில் காற்று மட்டும் அனுப்பி, 'லீக்கேஜ்' இருக்கிறதா என சரிபார்க்கப்படுகிறது.

எட்டாவது வார்டுக்கு உட்பட்ட சில இடங்களில், வீட்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டு, காஸ் சப்ளை செய்யப்படுகிறது. சில பகுதிகளில் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் சோதனை முறையில் 'செக்' செய்யாததால் ரோடு சீரமைக்கப்படவில்லை.

அதனால், வீதிகளில் ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது. மண் ரோடாக இருப்பதால், மழை பெய்யும் போது சேறும் சகதியுமாகி விடுகிறது. எட்டு வீதிகளில் இத்தகைய பாதிப்பு அதிகமாக உள்ளது.

வாகனங்களில் செல்லும்போது வழுக்கி விழுகின்றனர். நடந்து கூட செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக, எட்டாவது வார்டு கவுன்சிலர் சந்திரனிடம் முறையிட்டனர். தற்காலிகமாக மண் கொட்டி சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

அதை செய்ய தாமதித்ததால் பொதுமக்கள், வெள்ளலுார் - பட்டணம் ரோட்டில் முனியப்பன் கோவில் அருகே நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, இரண்டு லோடு மண் கொட்டி, சமப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement