காலை நேரத்தில் கிராமத்துக்கு வந்த காட்டு யானைகள்; வனத்துக்குள் விரட்ட கும்கி வரவழைப்பு

பந்தலுார் : பந்தலுார் அருகே பிதர்காடு கைவட்டா கிராம குடியிருப்பு பகுதிகளில் புகுந்த இரண்டு ஆண் யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

பந்தலுார் அருகே பாட்டவயல், ஸ்கூல்மட்டம், சந்தக்குன்னு உள்ளிட்ட பகுதிகள் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், அடிக்கடி யானைகள் ஊருக்குள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் இரண்டு ஆண் யானைகள் முகாமிட்டது. பிதர்காடு வனச்சரகர் ரவி, வனவர் சுதீர்குமார் தலைமையிலான வனக் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

நேற்று காலை, 7:00 மணிக்கு கைவட்டா குடியிருப்பு வழியாக வந்த இரண்டு ஆண் யானைகள், தமிழக - கேரளா சாலையை கடந்து, அருகிலுள்ள தேயிலை தோட்டம் வழியாக ஆணப்பஞ்சோலா வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் கிராம வழியாக சென்று திடீரென சாலையை கடந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

வனத்துறை வாகனங்கள் இரண்டு பக்கமும் நிறுத்தப்பட்டு யானைகள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. இந்த காட்டு யானைகளை விரட்டுவதற்காக, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, கும்கி ஜம்பு வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement