சாலையில் ஆடு, மாடுகளுடன் நாய்களும் உலா! அச்சுறுத்தலுக்குள்ளாகிறது பயணிகளின் சுற்றுலா

ஊட்டி, குன்னுார், கூடலுார், பந்தலுார், கோத்தகிரி பகுதிகளுக்கு ஆண்டுக்கு, 35 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குதிரை, மாடு போன்ற கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், 'குதிரை மற்றும் மாடுகள் நகர் பகுதியில் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு அதிகபட்ச அபராதமாக, 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும்,' என, விடுக்கப்பட்ட எச்சரிக்கை காற்றில் பறந்துள்ளது.
மேலும், கால்நடைகளுக்கு 'டேக்' போட்டு எண் எழுதி கண்காணித்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஊட்டி நகர பகுதியில் குதிரை, கால்நடைகள் மற்றும் நாய்கள் அதிகளவில் உலா வருவதால், உள்ளூர் மக்கள் உட்பட சுற்றுலா பயணியர் கடும் அவதிப்படுகின்றனர்.
ஊட்டி நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில், '' சமீபத்தில் தான் பொறுப்பேற்றுள்ளேன். நகர பகுதிகளில் கால்நடைகள், நாய்கள் பிரச்னை குறித்து கவுன்சிலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்
மக்களை கடிக்கும் நாய்கள்
குன்னுார் பாஸ்டியர் நிறுவனத்தில் கடந்த காலங்களில், வெறிநாய் கடி மருந்துகள் தயாரிக்கப்பட்ட நிலையில், இங்கு பல இடங்களில் இருந்து வந்து சிகிச்சை பெற்று சென்றனர். தற்போது இந்த நிறுவனத்தில் நாய்கடி மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது முத்தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்படுவதற்கான சோதனை பணிகள் கடந்த, 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
இதனால், தற்போது இங்கு நாய் கடிக்கு, வெளியிடங்களில் இருந்து மருந்து வாங்கி தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோல அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாய்கடிக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
குன்னுார் டென்ட் ஹில், டி.டி.கே. சாலை, மார்க்கெட், சிம்ஸ் பார்க், சேலாஸ், அருவங்காடு என பல இடங்களிலும் தெரு நாய்கள் அதிகளவில் உலா வருகிறது. சமீபத்தில், டென்ட்ஹில் பகுதியில் குழந்தை, உட்பட பலரையும் நாய்கள் கடித்துள்ளன. ஊட்டியில் மாதந்தோறும், 10 பேர் நாய்கடிக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். மாவட்டத்தில், நாய்கள் பிரச்னைக்கு தீர்வு காண கமிட்டி அமைக்கப்பட்டது. நாய்களுக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், முழு தீர்வு கிடைக்கவில்லை.
இதே போல, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் சுற்றும் கால்நடைகளை பிடித்து வந்து கட்டி வைக்கவும், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதுவும் முறையாக செயல்படுவதில்லை.
கூடலுார்
கூடலுார் பகுதி, கேரளா, கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இவ்வழியாக கேரளா, கர்நாடகா இடையே அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்படுகிறது.
கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், திறந்தவெளியில் கொட்டப்படும் உணவு கழிவுகளை தேடி, கால்நடைகள் மற்றும் தெரு நாய்கள் நகரில் உலா வருவது அதிகமாக உள்ளது. இவைகள் நகரில் கிடைக்கும் உணவுகளை உண்டபின், சாலையோரம் நடைபாதைகளில், படுத்து ஓய்வெடுத்து செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளது.
இதனை தடுக்க நடவடிக்கை இல்லாததால் ஓட்டுநர்கள், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சாலைகளில் நாள்தோறும் கால்நடைகளால் சுற்றுலா மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சுந்தரேசன் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி, 26,095 கால்நடைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. கால்நடைகள் பராமரிப்பு குறித்து பொது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு குறித்து அவ்வப்போது முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் குறித்தான புகார் குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தான் கண்காணிக்க வேண்டும். எனினும், அவற்றை நகர பகுதிகளில் விடாமல் பாதுகாக்கும் வகையில் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்படும், ''என்றார்
ஆனந்தராஜா, சமூக ஆர்வலர் கூடலுார்: குறுகிய சாலை கொண்ட கூடலுார் நகரில் உலாவரும் கால்நடைகளால் வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. வாகன விபத்துகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க, திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், நகரில் உலா வரும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். வனவிலங்கு ஆர்வலர்கள் உதவியுடன் தெரு நாய்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் மக்களை பாதுகாக்க முடியும்,'' என்றார்.
அஷ்ரப், தலைவர், வியாபாரிகள் சங்கம்,பந்தலுார்: பந்தலுார் மூன்று மாநில வாகனங்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இங்கு கால்நடை வளர்ப்பவர்கள், தங்கள் கால்நடைகளை கொட்டகையில் அடைத்து வைக்காமல், பஜார் பகுதியில் உலாவ விடுவதால், இந்த வாயில்லா ஜீவன்கள் தங்கள் வயிற்று பசிக்கு சாலைகள் மற்றும் கடைகள் முன்பாக கிடக்கும் கழிவுகளை உட்கொண்டு, பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு இடையூறாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் பலமுறை கூட்டங்கள் நடத்தியும் அறிவிப்புகள் வெளியிட்டும், கால்நடைகளை பிடித்து அபராதம் விதித்த போதும் கால்நடை உரிமையாளர்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் காலை நேரங்களில் பஸ் நிலையம் மற்றும் கடைகள் முன்பாக சாணங்கள் நிறைந்து அதனை அகற்றுவது பெரிய வேலையாக மாறி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இது போன்ற நிலையை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நிருபர் குழு -
மேலும்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு திட்டவட்டம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
-
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
-
சோனியாவுக்கு தொடரும் சிகிச்சை: டாக்டர்கள் சொல்வது என்ன ?
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது