விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்; வனத்துறையினர், அதிகாரிகள் ஆலோசனை

ஆனைமலை : ஆனைமலை அருகே, காட்டுப்பன்றிகளை பிடிப்பது மற்றும் குழு அமைப்பது குறித்து வனத்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

தமிழகத்தில், விளைநிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள், விளை பயிர்களை சேதப்படுத்துகின்றன. இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்; காட்டுப்பன்றிகளை சுட்டு பிடிக்க வேண்டும் என, விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டது. இதற்காக, குழு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் சார்பில், குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம், ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபாலமுருகன் தலைமை வகித்தார். வனத்துறையினர், ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வனத்துறையினர் கூறியதாவது:

காட்டுப்பன்றிகளை பிடிப்பது குறித்து, வனத்துறை சார்பில் கடந்த ஜன., மாதம் புதிய சட்ட விதிகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டது.

வனப்பகுதியையொட்டி ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் நுழையும் காட்டுப்பன்றிகளை, வனத்துக்குள் விரட்ட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு கி.மீ., - இரண்டு கி.மீ.,க்குள் இருந்தால் காட்டுப்பன்றியை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கவும்; மூன்று கி.மீ., துாரத்துக்கு மேல் வரும் காட்டுப்பன்றிகளை பிடித்து வனத்தில் விடலாம்; விரட்டி விடலாம் அல்லது கமிட்டி வாயிலாக ஒப்புதல் பெற்று சுட்டு பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குழு அமைப்பது குறித்து, ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றது. ஒரு குழுவில், வனவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர் அல்லது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடம் பெறும் வகையில் குழு அமைக்கப்படுகிறது.

பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு என நான்கு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு குழு அமைக்கப்படும். அந்த குழுவின் வாயிலாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டன.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement