திட்டம் இருக்கு... தீர்வு இல்லை!

உடுமலை நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நகர குடியிருப்புகளில் வெளியாகும் கழிவு நீரை சேகரித்து, சுத்திகரித்து பயன்படுத்தும் வகையில், பாதாள சாக்கடை திட்டத்துக்கு, 2013ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கியது.

ரூ.56 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் வாரியத்தால், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 96.96 கி.மீ., நீளத்திற்கு பாதாளச் சாக்கடை குழாய்கள், 3,900 ஆளிறங்கும் குழிகள் மற்றும் நாள் ஒன்றுக்கு, 7.81 எம்.எல்.டி., கழிவு நீர் சுத்திகரிக்கும் திறனுடன் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது.

பணிகளின் போதே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்குப்பின், 2015ல், முதற்கட்ட பணிகள் நிறைவு பெற்று திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததும், மழைக்காலங்களில், சில குடியிருப்புகளில், கழிவு நீர் பாதாள சாக்கடை வழியாக வெளியேறாமல் தேங்கியது. ஆனால், இதுவரையும் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.

குறிப்பாக, பிரதான ரோடுகளில், ஆளிறங்கு குழி மூடிகள், ரோட்டின் உயரத்தை விட அதிகமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறுகின்றனர். பழநி ரோடு, ராஜேந்திரா ரோடு உள்ளிட்ட பல இடங்களில், இப்பிரச்னையால், மக்கள் பாதிக்கின்றனர். சில இடங்களில், மூடி உடைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பு நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பின், குறிப்பிட்ட இடைவெளியில், அடைப்புகளை சீரமைக்கின்றனர்.

இருப்பினும், ஆளிறங்கு குழி மூடி வழியாக கழிவு நீர் வெளியேறிய பிறகே, அடைப்பை சீராக்குவதாக புகார் உள்ளது. மேற்குப்பகுதியில், சேகரிக்கப்படும் கழிவு நீர் நேரடியாக தங்கம்மாள் ஓடையில் வெளியேற்றப்படுகிறது.

இதே போல், ஏரிப்பாளையத்திலும், சுத்திகரிப்பு நிலையமும் முறையாக செயல்படுவதில்லை. பாதாள சாக்கடை பராமரிப்புக்கு கூடுதல் வாகனங்கள், பணியாளர்கள் நியமித்து, புகார் தெரிவிக்க தனி அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்.

Advertisement