பாரா பாட்மின்டன்: காலிறுதியில் துளசிமதி

கொராத்: தாய்லாந்தின் கொராத் நகரில் ஆசிய பாரா பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையரில் 'குரூப் சி'யில் (எஸ்.யு.5) இந்தியாவின் துளசிமதி (தமிழகம்), வைஷாலி இடம் பெற்றனர். முதல் இரு போட்டியில் வெற்றி பெற்ற துளசிமதி, நேற்று தனது மூன்றாவது லீக் போட்டியில் தாய்லாந்தின் வாதினியை 21-8, 21-6 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்ற துளசிமதி காலிறுதிக்கு முன்னேறினார். வைஷாலி 3 போட்டியிலும் தோற்று வெளியேறினார்.
எஸ்.யு.5 பிரிவில் 'குரூப் ஏ'ல் இடம் பெற்ற இந்தியாவின் மணிஷா (தமிழகம்), பங்கேற்ற இரு போட்டியிலும் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் மானசி ஜோஷி., எஸ்.எல்.3 பிரிவில் 'குரூப் சி'ல் இடம் பெற்றார். முதல் இரு போட்டியில் தலா ஒரு வெற்றி, தோல்வியடைந்த மானஷி, 3வது, கடைசி போட்டியில் சீனாவின் ஜியாவோ ஜுஜியானை சந்தித்தார். இதில் மானஷி, 16-21, 21-15, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 'சி' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த மானஷி, காலிறுதிக்கு முன்னேறினார்.
தவிர இந்தியாவின் நிதேஷ் குமார், நித்ய ஸ்ரீ, கிருஷ்ணா நாகர் உள்ளிட்டோரும் தங்கள் பிரிவுகளில் காலிறுதிக்குள் நுழைந்தனர்.

Advertisement