அர்ப்பணிப்பு உணர்வுடன் வீரர்கள் பணியாற்ற வேண்டும்! பயிற்சி நிறைவு விழாவில் சி.ஆர்.பி.எப்., ஐ.ஜி., பேச்சு

பெ.நா.பாளையம்: 'அர்ப்பணிப்பு உணர்வுடன் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பணியாற்ற முன்வர வேண்டும்' என, கோவை சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லூரி ஐ.ஜி., லாங்சின்குப் பேசினார்.

கோவை அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு நாடு முழுவதும் சி.ஆர்.பி.எப்., பணிகளுக்காக தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மூன்று மாதங்களாக சி.ஆர்.பி.எப்., படையில் உதவியாளர் பணிகளுக்கான பயிற்சி நடந்தது.

இதில், 153 பேர் பயிற்சி பெற்றனர். பயிற்சி நிறைவு விழாவில், ஐ.ஜி., லாங்சின்குப் பேசுகையில், ''நாடு முழுவதும் பல்வேறு கலை, கலாச்சாரங்கள், பண்பாடுகள் ஆகியவற்றை மதித்து தேசப்பற்றுடன், அர்ப்பணிப்பு உணர்வுடன், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பணியாற்ற வேண்டும். தன்னம்பிக்கையுடனும், எந்த ஒரு தீய சக்தியை எதிர்கொள்ளும் திறத்துடனும், நாட்டு பணிக்காக உங்களை முழுமையாக அர்ப்பணித்து கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நியாயம், நேர்மையை கைவிடாமல், மனசாட்சியுடன் உங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.

முன்னதாக, பயிற்சி நிறைவு செய்த சி.ஆர்.பி.எப்., வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின், தேசியக்கொடி, மற்றும் சி.ஆர்.பி.எப்., கொடிகளின் முன்பு பயிற்சி முடித்தவர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து சிறந்த முறையில் பயிற்சிகளை நிறைவு செய்த வீரர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சி.ஆர்.பி.எப்., வீரர்களின் யோகா பயிற்சி, பார்வையாளர்களை கவர்ந்தது.

Advertisement