மதுக்கடைகளை அகற்ற நாம் தமிழர் கட்சி மனு

வால்பாறை : வால்பாறை நகரில், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக உள்ள மதுபானக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, நாம்தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மேத்யூ, மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி ஆகியோர், வால்பாறை தாசில்தாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு முன்பாக உள்ள அரசு மதுபானக்கடையால் பக்தர்கள் நிம்மதியாக கோவிலுக்கு செல்ல முடியவில்லை. இதே போல், வால்பாறை மார்க்கெட் பகுதியில் அம்மா உணவகத்தின் பின்பக்கம் நகராட்சி கட்டடத்தில் இயங்கும் மதுபானக்கடையால் பொதுமக்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.

வால்பாறை நகரில் செயல்படும் இந்த இரண்டு மதுபானக்கடைகளால் மக்கள் நிம்மதியாக ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை. எனவே, வால்பாறை நகரில் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள அரசு மதுபானக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement