காஷ்மீரில் இருந்து பஞ்சாபுக்கு தண்ணீர் தருவதா: உமர் அப்துல்லா எதிர்ப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பஞ்சாப்புக்கு தண்ணீர் வழங்குவதை ஏற்க முடியாது என முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வரவேற்பு தெரிவித்து இருந்தார். இந்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் கூறி வருகிறது.
இந்நிலையில், ஒப்பந்தம் ரத்தானதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நீர் செல்வதை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன்படி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானுக்கு திருப்பி விட மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக கடந்த மாதம் செய்தி வெளியானது. இதற்காக கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது: பஞ்சாப்புக்கு ஏன் தண்ணீர் தர வேண்டும்.இதனை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன். எங்களது தண்ணீர் முதலில் எங்கள் பயன்பாட்டிற்கு தான். ஜம்முவில் வறட்சி போன்ற சூழ்நிலை நிலவுகிறது. அப்படி இருக்கும்போது பஞ்சாப்புக்கு ஏன் தண்ணீர் அனுப்ப வேண்டும். அம்மாநிலம் ஏற்கனவே, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தண்ணீரை பெற்று வருகிறது. எங்களுக்கு தேவையாக இருக்கும்போது அவர்கள் தண்ணீரை தரவில்லை. எங்களை பல ஆண்டுகளாக அழ வைத்தனர். தற்போதைக்கு தண்ணீர் எங்களுக்கு. நாங்கள் முதலில் பயன்படுத்துகிறோம். பிறகு மற்றவர்களை பற்றி யோசிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
காரணம் என்ன
கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர், பதன்கோட்டில் கட்டப்பட்ட தடுப்பணை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ரவி நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த இந்த தடுப்பணை கட்டப்பட்டது. இது தொடர்பாக 1979 ல் இரு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டாலும் அது செயல்படுத்தப்படவில்லை. பஞ்சாப் அரசு இதற்கு பிரச்னை எழுப்பியதாக கூறப்படுகிறது. 2018 ல் மத்திய அரசு தலையிட்ட பிறகே, பிரச்னை முடிவுக்கு வந்தது. இதனை மனதில் வைத்தே பஞ்சாப்புக்கு தண்ணீர் வழங்க உமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

மேலும்
-
இரவிகுளம் தேசிய பூங்கா பொன்விழா கொண்டாட முடிவு
-
கடலில் மாயமான மீனவரை கண்டுபிடிக்க கோரி எம்.பி., எம்.எல்.ஏ., முற்றுகை
-
4 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
-
கலைஞர் 'டிவி' ஸ்ரீராம் மறைவு
-
9 சதவீதம் கட்டணம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு மொட்டை போடும் பதிவுத்துறை
-
தமிழர் வரலாற்றை அ.தி.மு.க., மறைக்க பார்க்கிறது: எழிலன்