பூஜை செய்த வேலுடன் மாநாட்டுக்கு வாங்க: நாகேந்திரன்

மதுரை: மதுரையில் நாளை நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டு குறித்து பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:


தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளை, முருக பெருமானின் பொற்பாதங்களில் சமர்ப்பித்துள்ள வேளையில், அனைத்தும் நிறைவேறும் வகையில், முருக பெருமானின் கையில் இருக்கும் வீரத்தின் சின்னமான, ஞானத்தின் தெய்வீகக் குறியீடான வேலை வணங்க கடமைப்பட்டுள்ளோம்.

மிகப்பெரிய வெற்றி



எனவே, தமிழக பா.ஜ.,வின் 67 மாவட்ட தலைவர்களும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஒரு அடி உயர வேல் கொண்டு வர வேண்டும். அவரவர் மாவட்டங்களில் உள்ள முருகன் கோவில்களில் அதை பூஜித்து எடுத்துவர வேண்டும்.


முருகன் வேலுடன் மாநாட்டுக்கு வரும்போது, கட்சியினர் முருக பக்தர்களுக்கு வருவதோடு, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். முருக மாநாடு வெற்றிகரமாக நடந்து விடக்கூடாது என, பலரும் வேண்டிக்கொண்டு காத்துள்ளனர்.


அவர்கள் எண்ணமெல்லாம் தவிடு பொடியாகும் அளவுக்கு மாநாடு மிகப் பெரிய வெற்றியடையும். அதன்பின், தமிழகத்தில் ஹிந்துக்கள் ஒற்றுமையும் எழுச்சியும் மிகப்பெரிய அளவில் இருக்கும்.


மற்றபடி, முருக பக்தர்கள் மாநாடு, ஒரு ஆன்மிகத் திருவிழாவாகவும் ஹிந்துக்கள் ஒற்றுமைக்காகவும் மட்டுமே நடத்தப்படுகிறதே தவிர, அரசியல் காரணங்களுக்காகவோ, லாபக் கணக்கு போட்டோ நடத்தவில்லை.

தி.மு.க., பதற்றம்



தமிழக அரசு சார்பிலும் பழனியில் முருகனுக்கு மாநாடு நடத்தப்பட்டது. அது குறித்து யாரும் விமர்சிக்கவில்லை; பொறாமைப்படவில்லை. ஆனால், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு அறிவிக்கப்பட்ட நாலில் இருந்து, தமிழக அரசு தரப்பிலும் தி.மு.க., தரப்பிலும் பதறுகின்றனர். காரணம், ஹிந்துக்கள் ஒன்றுபட்டுவிடுவர் என்ற பதற்றம்தான். இவ்வாறு அவர் கூறினார்.


தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிவிப்பை அடுத்து, தமிழகம் முழுதும் உள்ள முருகன் கோவில்களில் வேல் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


இப்படி பூஜை செய்து, பா.ஜ.,வினரால் மதுரைக்கு எடுத்து வரப்படும் வேல்கள், முருக பக்தர்கள் மாநாட்டு மேடையில் நயினார் நாகேந்திரனிடம் வழங்கப்படுகிறது.

Advertisement