பெண்ணுடன் பேசிய இளைஞரை கட்டி வைத்து தாக்குதல் * பெண் தற்கொலை * எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் மூவர் கைது

திருவனந்தபுரம்:கேரளாவில் பெண்ணுடன் பேசிய இளைஞரை கடத்தி கட்டி வைத்து தாக்கியதாக எஸ்.டி.பி.ஐ.,யைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராயி பகுதியைச் சேர்ந்தவர் ரஃபீக். துபாயில் பணிபுரிகிறார். மனைவி ரசீனா 40. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இரு நாட்களுக்கு முன் ரசீனா அப்பகுதியில் ரோட்டில் வந்தபோது அறிமுகமான இளைஞருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி எஸ்.டி.பி.ஐ., தொண்டர்கள் முபஷீர் 28, பைசல் 34, ரப்னாஸ் 26, ஆகியோர் இரண்டு பேரிடமும் வலுக்கட்டாயமாக விசாரித்தனர். பின் ரசீனாவை வீட்டுக்கு அனுப்பி விட்டு இளைஞரை அப்பகுதி கட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்று கட்டி வைத்து தாக்கினர். அவரிடம் இருந்து அலைபேசி, டேப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின் ரசீனா மற்றும் இளைஞரின் உறவினர்களை வரவழைத்து இனி இரண்டு பேரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என மிரட்டியுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பின் அந்த இளைஞர் விடுவிக்கப்பட்டார். இதனால் மனமுடைந்த ரசீனா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக பினராயி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தற்கொலைக்கு எஸ்.டி.பி.ஐ.,யைச் சேர்ந்த முபஷீர், பைசல், ரப்னாஸ் ஆகியோர் தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மூவரும் தலச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ரசீனாவுடன் பேசிய இளைஞர் தலைமறைவானார். அவரையும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement