ஓடும் ரயிலில் கடை ஊழியர் அடித்து கொலை: உ.பி.,யில் 5 பேர் கைது

பாக்பத்: உ.பி.,யில் ஓடும் ரயிலில் சீட் தகராறில் கடை ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

உ.பி., மாநிலம் சஹாரன்பூர்-டில்லி பயணிகள் ரயிலில், டில்லியிலிருந்து சொந்த ஊரான பாக்பத்திற்கு தீபக் யாதவ் 39,திரும்பிக்கொண்டிருந்தார். ரயில், பக்கர்பூர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது ரயிலில் சீட் தொடா்பாக,தீபக் யாதவிற்கும் மற்ற பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தீபக் யாதவை அடித்து உதைத்துவிட்டு, ரயில் நிற்கும் முன்பே தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர் கேக்ராவில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.இதனிடையே பயணிகள் சிலர்,இந்த சம்பவம் குறித்து வீடியோ எடுத்து இன்று சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். அது வைரலாகியது. இந்நிலையில் போலீசார் புகார் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஸ்வேதா அசுதோஷ் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட தீபக் யாதவ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த வீடியோ பதிவில், ஷாம்லி செல்லும் பயணிகள் ரயிலின் ரயில் பெட்டியில் தீபக்கை ஒரு கும்பல் பெல்ட்களால் அடிக்கிறார்கள். அதை சில பயணிகள் அந்த கும்பலை தடுக்க முயற்சிக்கின்றனர். அதை தொடர்ந்து தாக்குதில் நடத்திய கும்பல் கெக்ரா அருகே, ரயிலில் இருந்து குதிக்கிறார்கள்.
தீபக்கின் தாய் மாமா சுபாஷ் யாதவ், பாசி கிராமத்தைச் சேர்ந்த ராகுல் பாபா என்ற நபரால் இந்த கும்பல் வழிநடத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். இந்த காட்சிகள், அடிப்படையில்
நடத்திய விசாரணையில் நாங்கள் 5 பேரை கைது செய்துள்ளோம். இது தொடர்பாக மேலும் விசாரணை செய்து வருகிறோம்.

இவ்வாறு ஸ்வேதா அசுதோஷ் கூறினார்.

Advertisement