ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் கூட்டம் அதிகரிப்பு கூடுதல் பெண் டாக்டர் நியமிக்க கோரிக்கை
கம்பம்: கம்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் கர்ப்பிணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூடுதல் பெண் டாக்டர், நிரந்தர லேப் டெக்னீசியன் நியமிக்க வேண்டும்.
பெண்கள் கர்ப்பம் தரித்தவுடன் தங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். அதன்பின் தான் அரசு வழங்கும் ரூ.18 ஆயிரம் கிடைக்கும். ஆரம்ப சுகாதார நிலையம் தரும் 'பிக் மீ 'எண் இருந்தால் தான் பிறப்பு சான்றிதழ் பெற முடியும். எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்யாமல் பிறப்பு சான்றிதழ் பெற முடியாது.
எனவே, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வாரந்தோறும் செவ்வாய் கிழமை கர்ப்பிணிகள் பதிவு மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு பரிசோதனை நடைபெறும்.
கம்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கர்ப்பிணிகள் பரிசோதனை செய்கின்றனர். ஆனால் மற்ற நாட்களிலும் குறைந்தது 50 முதல் 75 கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர்.
எனவே ,இங்கு கூடுதலாக ஒரு பெண் டாக்டர் நியமிக்க வேண்டும். தற்போது பணியில் ஒரு ஆண் டாக்டர் மட்டுமே உள்ளார்.
மேலும் இங்கு நிரந்தர லேப் டெக்னீசியன் இல்லை. மாற்று பணியாக புதுப்பட்டியிலிருந்து ஒருவர் வருகிறார். எனவே, நிரந்தரமாக பெண் லேப் டெக்னீசியன் நியமனம் செய்ய வேண்டும் என கர்ப்பிணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம் அரசு மருத்துவமனையிலும் பரிசோதனைகள் செய்தாலும், பதிவு செய்ய இங்கு தான் வர வேண்டும் என்பதால் இங்கு கூடுதலாக - ஒரு பெண் டாக்டர், நிரந்தர பெண் லேப் டெக்னீசியன் நியமிக்க துணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.