அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு: கவர்னர் ரவி கருத்து

மதுரை: “மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது,” என கவர்னர் ரவி தெரிவித்தார்.
மதுரையில், முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் அருட்காட்சிக்கு கவர்னர் ரவி நேற்று சென்று, அனைத்து சன்னதிகளிலும் வழிபட்டார். ஹிந்து முன்னணி சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின், அவர் கூறியதாவது:
கடவுள் முருக பெருமான், தமிழ் மக்களின் அடையாளம். உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்களின் கடவுளான சிவனை, 'தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்கும் இறைவா போற்றி' என அழைக்கிறோம். சிவனின் குழந்தை முருகன்.
முருகனின் அறுபடை வீடுகளை ஒரே இடத்தில் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதை ஏற்பாடு செய்தோருக்கு நன்றி. இந்த மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது.
நம் கலாசாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஹிமாலய யாத்திரை பக்தர்கள், உத்தராகண்டில் ஒரே இடத்தில், நான்கு புனித தலங்களை தரிசிக்க முடியும்.
இதுபோல, அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும், முருக பக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.