சிறந்த கால்பந்து வீரராக உருவெடுப்பது எப்படி?

'சிறந்த கால்பந்து வீரராக உருவாக வேண்டுமெனில், கடும் சிரத்தை எடுக்க வேண்டும். அதிக நேரம் ஓட வேண்டும். அதற்கேற்ப சிறுவயதில் இருந்தே தயாராக வேண்டும்,' என்கிறார், சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் பங்கேற்ற, பூபாலன்.

திருப்பூர், காலேஜ் ரோடு, மாஸ்கோ நகரை சேர்ந்தவர், பூபாலன், 24. கணியாம்பூண்டி மைக்ரோகிட்ஸ் பள்ளியில் படித்த இவர், எட்டாம் வகுப்பு முதல் கால்பந்து போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார்.

பள்ளி படிப்பு முடிக்கும் முன் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த இவர், கல்லுாரி படிப்பை தொடரும் போது கல்லுாரி அணிகளுக்கான மாநில கால்பந்து போட்டியில் பங்கேற்றார்.

தொடர் பயிற்சி...இடைவிடாத முயற்சி



தொடர் பயிற்சி மற்றும் இடைவிடாத முயற்சியால், தமிழக சீனியர் 'ஏ' அணிக்கு தேர்வாகினார். கடந்த 2023ல் தமிழக கால்பந்து வீரர்களில் ஒருவான பூபாலன், பெங்களூருவில் நடந்த சீனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா அணிகளுக்கு எதிராக விளையாடிய தமிழக அணியில் இடம் பெற்றார். இந்த அனுபவம் சந்தோஷ் டிராபி போட்டியில் பங்கேற்க இவருக்கு பெரும் உதவியாக இருந்தது.

எந்நேரமும்கால்பந்துதான்...



பூபாலன் கூறியதாவது:

கால்பந்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பள்ளி பருவத்திலேயே உதித்தது. எந்நேரமும் மைதானத்தில், கால்பந்து விளையாடுவேன். கல்லுாரிக்கு வரும் போது கால்பந்து போட்டி நுணுக்கம், சிறப்பாக விளையாடும் வீரர்களின் ஸ்டைல்களை பார்த்து கற்றுக்கொண்டேன்.

தமிழகத்தை தாண்டி, கேரள மாநிலம், கோழிக்கோடு பல்கலையில் நடந்த போட்டி பிற மாநிலத்தவர் ஆட்டங்களை கற்றுத்தந்தது. சென்னை எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் நடந்த போட்டிகளில் பலர் விளையாடுவதை பார்க்கும் போது, நாமும் விளையாட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.

தொடர் முயற்சியால் அந்த வாய்ப்பும் கிட்டியது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக காரைக்குடி, கன்னியாகுமரி, நாகை மாவட்ட அணிகள் கால்பந்தில் சாதிக்கின்றன.

11 ஆண்டு கால உழைப்பு



13 வயதில் துவங்கிய கால்பந்து பயணம், 11 ஆண்டுகள் கழித்து தான் சந்தோஷ் டிராபி வரை வர முடிந்தது. கால்பந்து போட்டியில் சாதிக்க நிறைய ஓட வேண்டும்; அதற்கேற்ற சிறு வயதிலே உடலை தயார்படுத்திட வேண்டும்.

இவ்வாறு பூபாலன் கூறினார்.

தற்போது பூபாலன், முழு நேர கால்பந்து வீரராக உள்ளார். பெங்களூரு சூப்பர் டிவிசன் அணிக்காக தயாராகி, துணை பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். பூபாலனின் பெற்றோர் புளியம்பட்டியில் விவசாயம் செய்து வருகின்றனர்.

அடிபடும் என்று யோசித்தால்

விளையாட முடியுமா?

வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி, கால்பந்து விளையாட்டில் பெற்றோருக்கும் ஆர்வம் வர வேண்டும். இப்போது கால்பந்து மைதானத்துக்கு அனுப்ப வேண்டும் என்றாலே அடிபட்டு விடும் யோசிக்கின்றனர். இந்த மனநிலை மாற வேண்டும்.

- பூபாலன், கால்பந்து வீரர்.

Advertisement