நீதிபதிக்கு சாபமிட்ட குற்றவாளி சைதை நீதிமன்றத்தில் பரபரப்பு

கிண்டி, விருதுநகர் மாவட்டம், சாத்துாரைச் சேர்ந்தவர் சின்னராஜ், 38. நேற்று முன்தினம், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார்.
இங்கு பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம், 'என் நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு உள்ளேன்; ஆனால் தண்ணீர் இல்லை. இது குறித்து, மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால் கவர்னரை பார்த்து முறையிட வந்துள்ளேன்' எனக்கூறினார். 'முறையான அனுமதி பெற்றால் தான் கவர்னரை சந்திக்க முடியும்' என, போலீசார் தெரிவித்தனர்.
'கவர்னரை சந்திக்க விடாவிட்டால், இங்கு தீக்குளிப்பேன்' என, சின்னராஜ் கூறினார். அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பாட்டிலை பறிமுதல் செய்தனர். அப்போது, போலீசாரிடம் தகாத வார்த்தைகளால் பேசி எரித்து விடுவதாக மிரட்டினார். அவரை மடக்கி பிடித்து, கிண்டி போலீசில் ஒப்படைத்தனர்.
சின்னராஜை கைது செய்த போலீசார், சைதாப்பேட்டை 9வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை, ஜூலை 4ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
அப்போது மாஜிஸ்திரேட்டை பார்த்து, ''என்னை சிறையில் அடைக்க உத்தரவிட்ட உங்களுக்கும் சாபம் விடுகிறேன். இனி நிம்மதியாக இருக்க விட மாட்டேன்,'' என சின்னராஜ் கூறினார். இதனால், சிறிது நேரம் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.