சாலையோரம் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அப்பாராவ் குறுக்கு தெருவில், அகற்றப்படாமல் உள்ள குப்பை குவியலால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

காஞ்சிபுரம் அப்பாராவ் குறுக்கு தெரு வழியாக, பவளவண்ணர், பச்சைவண்ண பெருமாள் கோவில், தாமல்வார் தெரு உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று முறையாக குப்பையை சேகரிக்காததால், அப்பகுதியினர் அப்பாராவ் குறுக்கு தெருவில் குப்பையை கொட்டி வருகின்றனர்.

குப்பையை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றுவதில்லை. இதனால், சாலையோரம் குப்பை குவியலாக உள்ளது.

இதனால், அவ்வழியாக செல்வோர் முகம் சுளித்தபடியே செல்கின்றனர். காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, அப்பாராவ் குறுக்கு தெருவில் உள்ள குப்பையை அகற்றுவதோடு, துாய்மை பணியாளர்கள் அப்பகுதியில் வீடு வீடாக சென்று குப்பையை சேகரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement