சிறுத்தை கவ்வி சென்ற சிறுமியின் சடலம் மீட்பு 

வால்பாறை : வால்பாறை அருகே, சிறுத்தை கவ்வி சென்ற சிறுமியின் சடலம், 13 மணி நேர தேடுதலுக்கு பின் மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம், வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் தோட்ட பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடும்பத்துடன் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கின்றனர். இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் விளையாடிக் கொண்டிருந்த அவர்களது ஐந்து வயது மகள் ரோஸ்லிகுமாரியை சிறுத்தை கவ்விச் சென்றது.

சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ஓடி வருவதற்குள் வனப்பகுதிக்குள் சிறுமியை இழுத்துச் சென்றது. சிறிது துாரத்தில் சிறுமியின் ஆடை மட்டுமே கிடந்தது. சிறுமியை தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

நேற்று காலை, போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, வனத்துறையினருடன் இணைந்து சிறுமியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் சிதறிக்கிடந்த சிறுமியின் சடலத்தை, 13 மணி நேர தேடுதலுக்கு பின் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

சிறுத்தையின் பசிக்கு இரையான குழந்தையின் உடலை கண்டு பெற்றோரை கதறி அழுதனர். இறந்த குழந்தையின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதில் முதற்கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்பட்டது.

Advertisement