டில்லி உஷ்ஷ்ஷ்: டிரம்ப் - முனீர் சந்திப்பில் நடந்தது என்ன?

வாஷிங்டன்: நம் எதிரி நாடான, பாகிஸ்தானின் பீல்டு மார்ஷல் முனீரை திடீரென ஏன் டிரம்ப் சந்திக்க வேண்டும்?

காரணம் இதுதான்... 'ஈரான் -- இஸ்ரேல் போர். பாகிஸ்தானின் பக்கத்து நாடு ஈரான். இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே. 1,000 கி.மீ., துாரம் பொது எல்லை உள்ளது. ஈரானை, அமெரிக்கா தாக்க நினைத்தால், பாகிஸ்தானின் விமான தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்...

'அத்துடன், ஈரான் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்த விபரங்களை பாகிஸ்தான் நன்கு அறியும். இதெல்லாம் அமெரிக்காவிற்கு ஆதாயமான விஷயங்கள். இதனால்தான், பஹல்காம் தாக்குதலின் மூளையான, ஆசிப் முனீரை, டிரம்ப் அழைப்பதற்கான காரணம்' என, சொல்லப்படுகிறது.

முதலில், ஒரு மணி நேரம்தான் இந்த சந்திப்பு எனக் கூறப்பட்டாலும், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் டிரம்ப் -- முனீர் சந்திப்பு நடந்து உள்ளது. அமெரிக்க அதிபருடன், பல முக்கிய அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகரும், இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும், ஐ.எஸ்.ஐ., அமைப்பின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் மாலிக் என்பவரும், இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் டிரம்பும், முனீரும், எந்த அதிகாரிகளும் இல்லாமல் தனியாகவும் ஆலோசனை நடத்தி உள்ளனராம். இந்த சந்திப்பின்போது, இஸ்ரேலுக்கு எதிராக முனீர் பேசவில்லையாம்.

நம் ஊர் அரசியல்வாதிகள் போல, தன்னை புகழ்வதை பெருமையாக நினைப்பவர் டிரம்ப். கூட்டம் முடிந்ததும், 'டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும்' என, ஆசிப் முனீர் சொன்னதும், மகிழ்ந்துபோன டிரம்ப், முனீரை சகட்டுமேனிக்கு பாராட்டி தள்ளிவிட்டார்.

'தன் சொந்த விஷயத்திற்காக, எந்த நிலைக்கும் போகக்கூடியவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்பது இப்போது பிரதமருக்கு விளங்கிவிட்டது' என்கின்றனர் அதிகாரிகள்.

Advertisement