கோயிலை பழமையான நினைவுச் சின்னமாக அறிவிக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோயிலை பழமையான நினைவுச் சின்னமாக அறிவிக்க தாக்கலான வழக்கில், அது மத்திய தொல்லியல்துறையின் ஆய்விற்குட்பட்டது எனஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருமோகூர் சென்றாய பெருமாள் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய்க்கரையில் பழமையான வெயிலுகந்த அம்மன் கோயில் உள்ளது. திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. மதுரை- விருதுநகர் இரட்டைவழி ரயில் பாதைக்காக கோயிலை அகற்றக்கூடாது. பாதுகாத்து பழங்கால நினைவுச் சின்னமாக அறிவிக்க தமிழக சுற்றுலாத்துறை செயலர், மத்திய தொல்லியல்துறை (ஏ.எஸ்.ஐ.,) கண்காணிப்பாளர், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி எஸ்.ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது. இதை ஆராய வேண்டியது ஏ.எஸ்.ஐ.,தான். மனுதாரர் அனுப்பிய மனு மீது விதிகள்படி ஏ.எஸ்.ஐ., நடவடிக்கை எடுக்கும் என மத்திய அரசு தரப்பு தெரிவித்தது. இருப்பினும் கோயில் பழமையான நினைவுச் சின்னமாக கருதப்படும் என உத்தரவாதம் அளிக்கிறது என கருதக்கூடாது. அது விதிகள்படி ஆய்விற்குட்பட்டது. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.