யூரியாவை பதுக்கி விற்பதாக விவசாயிகள்... குற்றச்சாட்டு:மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட தனியார் உரக்கடைகளில், யூரியா உரத்தை பதுக்கி விற்பனை செய்வதாக, விவசாயிகள் இடையே புகார் எழுந்துள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், 1.50 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இதில், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களில், நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

சம்பா, நவரை ஆகிய இரு பருவங்களில், 60,000 ஏக்கர் நிலப்பரப்பிலும், சொர்ணவாரி பருவத்தில், 15,000 ஏக்கர் பரப்பளவிலும், நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

தவிப்பு



தஞ்சை, திருவாரூர், அரியலுார், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவேரி நீர்ப்பாசனம் பெறும் டெல்டா மாவட்டங்களை போல, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நெல் சாகுபடி செய்வதற்கு, குறுவை சாகுபடி செய்ய வேண்டும் என, தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த பருவத்தில் பயிரிடப்பட்ட நெல், நேற்று முன்தினம் வரை 18,278 ஏக்கர் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2,470 ஏக்கரில் கூடுதலாக சாகுபடிக்கு வரும் என, வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நெற்பயிர்களுக்கு வைப்பதற்காக யூரியா உரம் கிடைக்காமல், விவசாயிகள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கட்ராமன் கூறியதாவது:

தனியார் உரக்கடைகளில், அரசு வழங்கும் மானிய விலை யூரியா விற்பனை செய்தால், கடைக்காரருக்கு லாபம் கிடைக்காது. அதனுடன் பயிர் வளர்ச்சி டானிக் உள்ளிட்ட இணை உரங்களை விற்றால் மட்டுமே, கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கடைக்காரர்கள் விவசாயிகளிடம் இணை உரங்களை திணிக்கின்றனர். தேவை இருக்கும் விவசாயிகள் வாங்கிச் சென்று விடுகின்றனர்.

புரியவில்லை



தேவை இல்லாத விவசாயிகளுக்கு, யூரியா உரம் இருப்பு இருந்தாலும் மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால், விவசாயிகள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

யூரியா தட்டுப்பாடு குறித்து, வாலாஜாபாத் வேளாண் துறையில் புகார் அளித்தால், அதிகாரிகள் எவ்வித பதிலும் அளிப்பதில்லை. இப்படி இருந்தால், எப்படி விவசாயம் செய்வது என புரியவில்லை.

தனியார் உரக்கடைக்காரர்கள் யூரியா உரங்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி, யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரையில், 18,278 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 2,690 டன் யூரியா இருப்பு உள்ளது.

சராசரியாக, மூன்று மடங்கு உரம் நம் மாவட்டத்தில் இருப்பு உள்ளது. மேலும், விவசாயிகளும் யூரியா மூட்டைகளை வேளாண் துறை நிர்ணயம் செய்த அளவையே பயன்படுத்த வேண்டும். கூடுதலாக பயன்படுத்துவதால், நோய் தாக்கத்தின்போது நெற்பயிர் பாதிப்பில் இருந்து மீள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement