குன்றம் காக்க.. கோயிலை காக்க... மதுரையில் இன்று பிரமாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு

மதுரை:மதுரையில் 'குன்றம் காக்க.. கோயிலை காக்க...' எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு இன்று (ஜூன் 22) மதியம் 3:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது.

மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு 8 லட்சம் சதுர அடி பரப்பு மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 அடி உயரத்தில் சிறிய மேடையும், அதன் பின் 10 அடி உயரத்தில் பெரிய மேடையும் உள்ளது. மேடையின் மையத்தில் முருகன் வேலுடன் நிற்பது போன்ற பதாகையும், அதன்பின் கோயில் கோபுரமும், குன்றமும் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 5 லட்சம் பக்தர்கள் கந்தசஷ்டி கவசம்



ஒரு லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாடு முக்கிய நிகழ்வாக மாநாடு அரங்கிலும், வெளியிலுமாக 5 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது என ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர். நேரில் கலந்து கொள்ளாதவர்கள் அவரவர் வீடுகளில் இருந்து பாடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களை மதியம் 3:00 மணிக்குள் மாநாட்டு திடலுக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். மாலை 4:00 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும். இதற்காக மாநாட்டு வளாகம் முழுவதும் 18 எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. திரையை பார்த்து பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்பின் சிறப்பு விருந்தினர்களின் உரை இருக்கும். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மடாதிபதிகள், ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இறுதியாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.

கூட்ட நெரிசல் தவிர்க்க ஏற்பாடு



​முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் முன்னதாக 'பாஸ்' பெற வேண்டும் என போலீசார் அறிவித்திருந்தனர். இதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் வெளியூர்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கேற்ப வாகனங்களை பார்க்கிங் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வண்டியூர் டோல் கேட் அருகே பிரதான சாலையில் மாநாடு வளாகம் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநாட்டிற்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மாநாடு வளாகத்திற்கு பொதுமக்கள் செல்ல இரு நுழைவு வாயில்களும், வி.ஐ.பி., வாகனங்கள் செல்ல ஒரு நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு வளாகத்திற்கு எதிர்புறம் வாகனங்கள் நிறுத்த மிகப்பெரிய பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்லும் வழியில் பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவர்.

ஹிந்து அமைப்பு தன்னார்வலர்கள்



வாகனங்களை ஒருங்கிணைக்கவும், பக்தர்களை வழிநடத்தவும் அந்த பகுதியில் மட்டும் 300 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்கள் பிரித்து விடப்படுவர். மாற்றுத்திறனாளிகள் செல்ல சக்கர நாற்காலிகளும், தாய்மார்கள் பாலுாட்டுவதற்கான தனி அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 1,000 லிட்டர் தண்ணீர் டேங்குகள், 200 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

2279 போலீசார் பாதுகாப்பு



மாநாட்டையொட்டி போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 5 துணை கமிஷனர்கள், 15 உதவி கமிஷனர்கள், 54 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 2279 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறப்பு விமானத்தில் பவன் கல்யாண்



ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் மாநாட்டில் பங்கேற்க சிறப்பு விமானத்தில் இன்று காலை 11:00 மணிக்கு மதுரை வருகிறார். காலையில் மீனாட்சி கோயில், மாலையில் திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்து விட்டு மாலை 6:00 மணியளவில் மாநாட்டிற்கு வருகிறார். இரவு 8:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஆந்திரா செல்கிறார். இதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்



முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் அருட்காட்சி ஜூன் 16 ல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். கடந்த 5 நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளுக்குநாள் பக்தர்களின் வருகை அதிகரித்ததால் நேற்று முன்தினம் இரவு 10:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுபோல், நேற்று ஒரு மணி நேரம் முன்னதாக அருட்காட்சி தொடங்கியது. இன்றும் (ஜூன் 22) காலை 8:00 மணி முதல் பக்தர்கள் அருட்காட்சி காண அனுமதிக்கப்படுவர். நேற்று மாலை வரை அருட்காட்சியை ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

காவடி எடுத்து வந்து வழிபாடு

அறுபடை வீடுகளின் அருட்காட்சிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.அருட்காட்சியில் இடம்பெற்ற கோயில்களுக்கு நேற்றுபக்தர்கள் மயில்காவடி எடுத்து வந்தனர். அறுபடை வீடுகளில் உள்ள முருகனையும் காவடி எடுத்து வழிபட்டனர். பெண்கள் கும்மியாட்டம் நடத்தினர். அதுபோல் மாநாடு நடைபெறும் இன்று பால்குடம், காவடி எடுக்க திட்டமிட்டுள்ளதாக ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.



மாநாடு நிகழ்ச்சி நிரல்



வழிநடத்த 27 குழுக்கள் 2000 தன்னார்வலர்கள்

மாநாடு நடைபெறும் வளாகத்தில் பக்தர்களை வழிநடத்துவதற்காகவும், நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தவும் ஹிந்து முன்னணி சார்பில் பாதுகாப்பு, சுகாதாரம், மைதானம், மருத்துவம், ஊடகம், இதர பிரிவுகள், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 50 முதல் 100 பேர் என சுமார் 2,000 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மாநாட்டுக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக மாவட்ட வாரியாக 81 தன்னார்வலர்கள் குழுவும், 25 பேர் கொண்ட வழக்கறிஞர் குழுவும் தனியாக நியமிக்கப்பட்டுள்ளது.அவசர மருத்துவ தேவை ஏற்படுவோருக்கு மருத்துவ உதவி வழங்க 13 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தயார் நிலையில் 10 ஆம்புலன்ஸ்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் நிற்கும்.மாநாடு நுழைவு வாயில் முதல், மாநாடு நடைபெறும் பகுதிக்கு செல்லும் வரை ஒவ்வொரு 20 மீட்டருக்கும் ஒரு தன்னார்வலர்கள் வழிகாட்டுவர்.

Advertisement