ஜல்லிக்கட்டில் யாரையும் ஒதுக்கி வைத்தால் அரசு சலுகை கிடைக்காது: உயர்நீதிமன்றம்

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் கணபதிபுரம் ஜல்லிக்கட்டில் யாரையும் ஒதுக்கி வைத்தால் அனுமதி மற்றும் அரசின் பிற சலுகைகள் மறுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கணபதிபுரம் கர்ணன் தாக்கல் செய்த மனு: கணபதிபுரத்தில் குறிப்பிட்ட சமூகம் உட்பட அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஜாதி பாகுபாடு அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தை விலக்கி வைக்கக்கூடாது. விலக்கி வைத்து ஜல்லிக்கட்டு நடத்த முயற்சித்தால் அனுமதி அளிக்கக்கூடாது என கலெக்டர், எஸ்.பி., ஆர்.டி.ஓ., தாசில்தார், அதகோட்டை போலீசாருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.

அரசு தரப்பு: புதுக்கோட்டை தாசில்தாரால் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதில் கிராமத்தினர் யாரையும் விலக்கி வைக்கக்கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: சமாதான கூட்ட முடிவு அடிப்படையில் மேலும் உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டியதில்லை.

எந்தவொரு நபரும் ஒதுக்கி வைக்கப்பட்டால் அரசு தரப்பிலிருந்து அனுமதி மற்றும் பிற சலுகைகள் வழங்குவது மறுக்கப்படும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.

Advertisement