தொழில்துறை தமிழகத்தில் சிக்கி சீரழிந்து வருகிறது புள்ளிவிபரங்களுடன் அ.தி.மு.க., குற்றச்சாட்டு

மதுரை: ''இன்றைக்கு தொழில் தொடங்க ஏற்ற 17 மாநிலங்களில் தமிழகம் இல்லை, தொழில்துறை தமிழகத்தில் சிக்கி சீரழிந்து வருகிறது,'' என, மதுரையில் அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார்.

அவர் கூறியதாவது:

இன்றைக்கு அரசியலில் நாகரிகம் இல்லாமல் அமைச்சர் ராஜா பேசி வருகிறார். தனது துறையில் நடக்கும் அவலங்களைகூட அவரால் சரி செய்ய முடியாத துர்பாக்கிய நிலையில்தான் தொழில் துறை உள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து அவதுாறாக கார்ட்டூன் வெளியிட்ட ராஜாவையும், அதற்கு துணைபோன முதல்வர் ஸ்டாலினையும் கண்டிக்கிறோம்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர திராணியில்லை.

தமிழகத்தில் தொழில் துறைக்கு மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 15 சதவீத சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. குறிப்பாக 2023ல் 4550 சிறு குறு நிறுவனங்களும், 2024ல் 5850 நிறுவனங்களும் மூடப்பட்டன.

ஸ்டாலின் 2022ல் துபாய் சென்று ரூ.6100 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்ததாகவும், ஸ்பெயின் சென்று ரூ.3440 கோடியில் தொழில் முதலீட்டை ஈர்த்ததாகவும் சொல்லப்பட்டது. இதில் ஒரு வேலைகூட நடக்கவில்லை.

உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ரூ.10 லட்சம் கோடிக்கு தொழில் முதலீட்டை ஈர்த்துள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் 10 சதவீதம் கூட தொழில் தொடங்கவில்லை. மின் கட்டண உயர்வால் சிறு குறு நிறுவனங்கள் மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்று விட்டன. இதன் மதிப்பு ரூ.2500 கோடி.

தமிழகத்திலிருந்து ஆயிரம் பின்னலாடை கம்பெனிகள் கேரளாவுக்கு சென்று விட்டன. தென்கொரியாவின் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆந்திராவுக்கு சென்று விட்டது. இதன் மதிப்பு ரூ.5000 கோடி. இன்றைக்கு தொழில் தொடங்க ஏற்ற 17 மாநிலங்களில் தமிழகம் இல்லை என்பது வேதனை.

ஏற்கனவே வேதாந்தா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு பிற மாநிலங்களுக்கு சென்று விட்டன. கொரோனா காலத்தில் எளிய முறையில் கடனை திருப்பி செலுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறினார்.

அதேபோல பொதுத் துறை நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும். ஒப்பந்த புள்ளிகளில் 10 சதவீத சலுகை அளிக்கப்படும் என்றார். எதையும் செய்யவில்லை. இப்படி தொழில்துறை தமிழகத்தில் சிக்கி சீரழிந்து வருகிறது. தொடர்ந்து பழனிசாமி குறித்து விமர்சனம் செய்தால் நாங்களும் பதிலடி கொடுப்போம்.

இவ்வாறு கூறினார்.

Advertisement