அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு தனி பதிவெண் தர வேண்டும் பல இடங்களில் மருந்து வாங்குவதால் அரசுக்கு இழப்பு
மதுரை,: ஒரே நோயாளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனித்தனி புறநோயாளி சீட்டு பதிந்து ஒருநோய்க்கு மூன்று முறை மருந்துகளை வாங்குவதால் அரசுக்கு தேவையற்ற இழப்பு ஏற்படுகிறது. இதை கண்காணித்து சரிசெய்யும் வகையில் ஆதார் எண் போல நோயாளிகளுக்கான தனி பதிவெண் வழங்க வேண்டும்.
பத்தாண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள வார்டுகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் அரசு மருத்துவமனை மொத்த இருப்பில் இருந்து கம்ப்யூட்டர் சர்வர் மூலம் கழிக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டது. இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளின் வார்டுகள் தோறும் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது.
அதற்கான இணைப்பு தற்போது வரை முழுமையாக்கப்படவில்லை. பெயருக்கு கம்ப்யூட்டர்கள் காட்சிப்பொருளாக உள்ளன. இதனால் வார்டுகளில் டாக்டர்கள் நோயாளிக்கு எழுதித்தரும் மாத்திரை சீட்டை மொத்தமாக கணக்கிட்டு தினந்தோறும் எவ்வளவு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது என விவரம் சேகரிக்கப்படுகிறது. அந்த தகவல் தமிழ்நாடு மருந்து சேவை கழகத்திற்கு (டி.என்.எம்.எஸ்.சி.,) அனுப்பப்படுகிறது.
ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளில் உள்ள வார்டுகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரைகள் பார்மசி துறையின் சர்வரில் கணக்கிடப்பட்டு கழிக்கப்பட்டு நேரடியாக டி.என்.எம்.எஸ்.சி., சர்வருக்கு அனுப்பப்பட்டால் எந்தெந்த மருத்துவமனைகளில் என்னென்ன மாத்திரைகள் இல்லை என்று உடனடியாக தெரியவரும். தேவைக்கு அதிகமாக மாத்திரை உள்ள மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்டு பற்றாக்குறையை சரிசெய்யலாம்.
தேவை குறையவில்லை
மருத்துவமனையின் இதயவார்டுக்கும், வயிறு சார்ந்த வார்டுக்கும் ஒரே நோயாளி சென்றால் கூட தனித்தனியாக புறநோயாளி சீட்டு வழங்கப்படுகிறது. சிலநேரங்களில் இரண்டு வார்டுகளில் பொதுவான மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரை செய்திருந்தால் அவற்றை கண்காணித்து மாத்திரை அளவை குறைப்பதற்கு தற்போதுள்ள நடைமுறையில் சாத்தியமில்லை. சர்க்கரை நோய், இதயநோய், ரத்தஅழுத்த பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி அலைவதை தவிர்க்கும் நல்ல நோக்கத்தில் 28 நாட்கள் முதல் 2 மாதங்களுக்கு தேவையான மொத்த மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு சென்று மாத்திரை வாங்குகின்றனர். 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழும் மொத்தமாக மாத்திரைகளை பெறுகின்றனர். இத்திட்டம் வந்த பின், மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால் குறையவில்லை.
இதை கட்டுப்படுத்தும் வகையில் ஆதார் எண் போல நோயாளிக்கான பதிவெண் அட்டை வழங்க வேண்டும். இதை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் நோயாளியின் பதிவெண்ணை கொண்டு மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் நோயாளியை கண்டறிந்து அவர்களிடம் உள்ள மாத்திரைகளின் இருப்பை கண்டறிந்து அதற்கேற்ப குறைத்து வழங்கலாம்.
இதன் மூலம் மாத்திரைக்கான செலவையும் அரசு குறைக்க முடியும். மாத்திரைகளின் இருப்பை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் 'சர்வர்' இணைப்பை அரசு விரைவுபடுத்த வேண்டும்.
மேலும்
-
திருவாலங்காடு தேர் மண்டபத்திற்கு பலகை அமைக்கும் பணி மும்முரம்
-
நெரிசலில் சிக்கிய கலெக்டர் இனியாவது தீர்வு கிடைக்குமா?
-
சாலை மைய தடுப்புச்சுவர் மீண்டும் அமைக்கப்படுமா?
-
'பீக் ஹவர்சில்' சாம்பல், நிலக்கரி லாரிக்கு தடை விதிக்க கிராமவாசிகள் கோரிக்கை
-
அதிகாரிகள் முன்னின்று சீரமைத்த கட்டடம் பராமரிப்பு இன்றி பாழ்
-
ஒவ்வொரு கல்வியாண்டிலும் 6,000 மாணவர்கள்... ஏமாற்றம்; இரண்டே அரசு கல்லுாரிகள் இருப்பதால் அதிருப்தி