மனைவியை கட்டாயப்படுத்தி காதலனுக்கு கட்டி வைத்த கணவன்

1

கோண்டா : உத்தர பிரதேசத்தில், மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகக் கூறிய கணவர் அந்த நபருக்கே கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தார்.

சந்தேகம்



உ.பி.,யின், கோண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிச்சந்திரா, 42. அவரது மனைவி கரிஷ்மா, 36. இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.



ஹரிச்சந்திராவுக்கும், கரிஷ்மாவுக்கும் அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், சிவராஜ் சவுஹான் என்பவருடன் கரிஷ்மா பழகி வந்ததாக ஹரிச்சந்திரா சந்தேகம் அடைந்தார். சில தினங்களுக்கு முன், இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்ததாகக் கூறிய ஹரிச்சந்திரா, கோவிலுக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

கோவிலில் சுவாமி சன்னிதி முன் நின்று, மனைவி கரிஷ்மாவின் நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்த ஹரிச்சந்திரா, சிவராஜ் சவுஹானுடன் மாலை மாற்றச் செய்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது.




இதையடுத்து, ஊர் கூட்டம் கூட்டப்பட்டு கிராமப் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சு நடந்தது. அப்போது, கரிஷ்மா தனக்கு விஷம் கொடுக்க முயன்றதாகவும், மகனுக்கு போதைப்பொருள் கொடுத்து கெடுக்க முயன்றதாகவும் ஹரிச்சந்திரா குற்றஞ்சாட்டினார்.

தொடர்பு இல்லை



ஆனால், இந்த குற்றச்சாட்டை கரிஷ்மா மறுத்தார். 'கணவருடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், சிவராஜுடன் எந்த தொடர்பும் இல்லை' எனக் கூறினார். தன்னை வேண்டுமென்றே கட்டாயப்படுத்தி சிவராஜுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்தார்.


கரிஷ்மாவுடன் இனி எந்த உறவும் இல்லை என உறுதியுடன் தெரிவித்த ஹரிச்சந்திரா, மகளை கரிஷ்மாவுடன் அனுப்பி வைத்தார். மகனை தன்னுடன் வைத்துக்கொண்டார்.

Advertisement