ஈரான் ராணுவ வளாகங்கள், தளபதிகளை குறிவைத்து தாக்கும் இஸ்ரேல் படைகள்

2

டெல்அவிவ்: ஈரானின் அணு ஆயுத வளாகத்தை தாக்கியதுடன், அந்த நாட்டின் ராணுவ வளாகங்களையும், தளபதிகளையும் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.


மேற்காசிய நாடுகளான ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், ஒன்பதாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அணு ஆயுதத் தயாரிப்புக்கு தயாராவதாகக் கூறி, ஈரான் மீது இஸ்ரேல் கடந்த, 13ம் தேதி தாக்குதலை துவங்கியது.


ஈரானின் அணு ஆயுத வளாகங்கள், அணு ஆயுதத் தயாரிப்புக்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் மையங்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

தளபதிகள் பலி



அந்த வகையில், செறிவூட்டல் மையம் அமைந்துள்ள இஸ்பாஹானை நோக்கி, இஸ்ரேல் நேற்று ஏவுகணைகளை செலுத்தியது. இதில், செறிவூட்டல் மையம் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.



ஒரு பக்கம் அணு ஆயுத வளாகங்களை தாக்கும் அதே நேரத்தில், ஈரான் ராணுவ வளாகங்களையும் இஸ்ரேல் தாக்கி வருகிறது.


இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல முக்கிய ராணுவத் தலைவர்களை இஸ்ரேல் படைகள் கொன்றுள்ளன.


இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில், இஸ்ரேல் ராணுவம் மற்றும் அந்த நாட்டின் மிகவும் வலுவான இஸ்லாமிய புரட்சிப் படையின் முக்கியத் தலைவர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் கூறியுள்ளது.


கடந்த, 2023 ஆகஸ்டில் பாலஸ்தீனத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அதையடுத்து பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் துவங்கிய போர் தற்போதும் தொடர்கிறது.


ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய, 2-023ம் ஆண்டு தாக்குதலுக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த, சயீத் இஸாதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இவர், ஈரானின் கட்ஸ் படைப்பிரிவின் பாலஸ்தீனப் பிரிவு தலைவராக இருந்தவர்.


இவரைத் தவிர, ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான முகமது பஹேரி, புரட்சிப் படையின் முக்கிய தளபதி ஹூசைன் சலாமி, புரட்சிப் படையின் ஏவுகணை பிரிவு தலைவர் அமிர் அமி ஹாஜிஜதே ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர்.

பேச்சு தோல்வி



இதற்கிடையே ஈரானும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. ஆனால், மிகவும் குறைந்த அளவுக்கே இந்த தாக்குதல்கள் இருந்தன.



போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உடன், ஈரான் குழுவினர் நேற்று சந்தித்து பேசினர். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த இந்தப் பேச்சு தோல்வியில் முடிந்தது.


'எங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எந்தப் பேச்சுக்கும் தயாராக இல்லை' என, ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


அணு ஆயுதம் தயாரிக்கும் ஈரானின் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வரும் வரை, போர் தொடரும்
என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.


தினமும் ரூ.8,659 கோடி செலவு

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் ஒன்பதாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.இந்தப் போரில், இஸ்ரேல் ஒவ்வொரு நாளும், 8,659 கோடி ரூபாய் செலவிடுவதாக, அந்த நாட்டின் ராணுவத் தளபதியின் முன்னாள் ஆலோசகர் ரீம் அமினாச் கூறியுள்ளார். தற்போது, ஒரு நாளைக்கு, 8,659 கோடி ரூபாய் செலவாவதாகவும், போர் துவங்கிய முதல் 48 மணி நேரத்தில் மட்டும், 12,035 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.'வான்வழி தாக்குதல்கள், வெடிமருந்துகள், போர் விமானங்களுக்கு ஆன செலவு தனி. இந்த செலவுகள் அனைத்தும் நேரடியான செலவினங்கள். 'பொதுமக்களின் உள்கட்டமைப்பு சேதமானது, உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கணக்கில் சேர்க்கப்படவில்லை. இவை எல்லாம் மறைமுக செலவினங்கள் என்பதால் முழுமையாக மதிப்பிட முடியாது' என, அவர் கூறியுள்ளார்.




அணுசக்தி முகமைக்கு மிரட்டல்

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் அலி லாரிஜானி கூறுகையில், ''அணு ஆயுதம் தயாரிப்பு, யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக, ஐ.ஏ.இ.ஏ., எனப்படும் சர்வதேச அணுசக்தி முகமை தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை கூறி வருகிறது. இதுவே, இந்தப் போர் துவங்குவதற்கும், நீடிப்பதற்கும் காரணமாகும். இதற்கான விலையை, முகமையின் தலைவர் ரபேல் மரியானோ கிராஸி கொடுக்க வேண்டியிருக்கும்,'' என்றார்.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தபோது, 'ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்கள் உள்ளன. ஆனால், அணு ஆயுதத்தை தயாரிக்குமா என்பது தெரியவில்லை' என, கிராஸி கூறியிருந்தார்.

Advertisement