நிதேஷ் குமார் 'தங்கம்': ஆசிய பாரா பாட்மின்டனில்

பாங்காக்: ஆசிய பாரா பாட்மின்டனில் இந்தியாவின் நிதேஷ் குமார், மணிஷா தங்கம் வென்றனர்.

தாய்லாந்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்கள் ஒற்றையர் 'எஸ்.யு.5' பிரிவு பைனலில் இந்தியாவின் மணிஷா ராமதாஸ், இரண்டு முறை பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சீனாவின் யாங் கியூஜியாவை சந்தித்தார். இதில் மணிஷா 21-18, 17-21, 21-15 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் மணிஷா வென்ற முதல் தங்கம். இப்பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை துளசிமதி வெண்கலம் வென்றார்.
நிதேஷ் 'ஹாட்ரிக்': ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல்.3' பிரிவு பைனலில் இந்தியாவின் நிதேஷ் குமார், இந்தோனேஷியாவின் முஹ் அல் இம்ரான் மோதினர். பாரிஸ் பாரலிம்பிக் சாம்பியன் நிதேஷ் 21-19, 21-12 என வெற்றி பெற்று தங்கம் வென்றார். இது, இம்முறை இவர் கைப்பற்றிய 3வது தங்கம். ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் (எஸ்.எல்.3 - எஸ்.எல்.4, ஜோடி: சுகந்த் கடம்), கலப்பு இரட்டையரில் (எஸ்.எல்.3 - எஸ்.எல்.5, ஜோடி: துளசிமதி) தங்கம் வென்றிருந்தார்.


மற்ற ஒற்றையர் பிரிவு பைனலில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனைகளான நித்யா ஸ்ரீ சிவன் (எஸ்.எச்.6), மன்தீப் கவுர் (எஸ்.எல்.3) வெள்ளிப்பதக்கத்தை பெற்றனர். இத்தொடரில் இந்தியாவுக்கு 4 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலம் என, 27 பதக்கம் கிடைத்தது.

Advertisement