தொழில் துறையில் தமிழகம் பின்தங்கியதற்கு 2026 தேர்தலில் பரிசு கிடைக்கும்: இ.பி.எஸ்.,

2

சென்னை; ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில்துறை பின்தங்கியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு 2026 தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசாக அளிப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., கூறி உள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;


உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ்நாடு “நம்பர் ஒன்” மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது. இது, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) 2024-25 நிதியாண்டு தரவுகள் அம்பலம் ஆகியுள்ளது.


ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டை ஈர்க்கிறேன்' என்று 2022ல் துபாய் மற்றும் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று ஈர்த்த முதலீடுகள் என்ன ? லூலூ மால், நோபுள் ஸ்டீல் என தொடக்கமே ஏமாற்று மாடல்தான். 2023ல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகள், 2024 பிப்ரவரியில் ஸ்பெயின், 2024 செப்டம்பரில் அமெரிக்கா சுற்றுப் பயணம் என்று விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு ?


தி.மு.க., அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.


நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியது தான் சாதனை.


இந்தச் சாதனையை பல கோடி அரசு செலவில் விளம்பரப்படுத்துவது வேதனை. இரு நாட்களுக்கு முன்பு அமைச்சர் தியாகராஜன், மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசும்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில்துறை பின் தங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுவே, ஸ்டாலினின் ஆட்சியில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்பதற்கு சான்று.


இந்தக் கொடுமையை அனுபவிக்கும் தமிழக மக்கள், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க.,வுக்கு 'தோல்வி'யை பரிசளித்து, அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்துவார்கள்.


இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement