அமெரிக்காவை கண்டிப்பது உங்கள் பொறுப்பு: சர்வதேச சமூகத்தை அழைக்கிறது ஈரான்

3

டெஹ்ரான்; தங்கள் நாடு மீதான அமெரிக்க தாக்குதல்களை தடுத்து நிறுத்துவது பன்னாட்டு சமூகத்தின் பொறுப்பு என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி கூறி உள்ளார்.



ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பல நாடுகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கின்றன. போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.


இந் நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களை அடுத்து, சர்வதேச நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டியது பன்னாட்டு சமூகத்தின் பொறுப்பு என்று ஈரான் கூறி உள்ளது.


இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி கூறி இருப்பதாவது;


எங்கள் நாட்டின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்ற தவறான குற்றச்சாட்டுகளின் கீழ் ஏன் தாக்கப்பட வேண்டும் என்பது எங்களுக்கு புரியவில்லை.


முந்தைய அணுசக்தி ஒப்பந்தத்தை கிழித்தெறிந்ததும், ராணுவத் தாக்குதல்கள் மூலம் சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகளில் குறுக்கிடுவதும் அமெரிக்காதான்.


அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையை கண்டிப்பது, தடுப்பது சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும். இல்லையெனில், சர்வதேச சட்டத்தில் எதுவும் மிச்சமிருக்காது.


ஈரானிய மக்கள் அரசாங்கத்துடன் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் உள்ளனர், மேலும் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement