ஈரான் நாட்டு மக்கள் மீது குறி வைக்கவில்லை: சொல்கிறார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்

2

வாஷிங்டன்: ''ஈரான் மீது நடத்திய தாக்குதலில் எங்களது ராணுவம், ஈரான் ராணுவத்தையோ, அந்நாட்டு மக்களையோ குறி வைக்கவில்லை,'' என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், 10வது நாளாக இன்றும் தொடர்கிறது. அணு ஆயுதத் தயாரிப்புக்கு தயாராவதாகக் கூறி, ஈரான் மீது இஸ்ரேல் கடந்த, 13ம் தேதி தாக்குதலை துவங்கியது. ஈரானின் அணு ஆயுத வளாகங்கள், அணு ஆயுதத் தயாரிப்புக்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் மையங்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று ஈரான் நாட்டின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா துல்லியமாக தாக்குதல் நடத்தி உள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியதாவது:
நாங்கள் அணுசக்தி நிலையங்கள் மீது மட்டுமே துல்லிய தாக்குதல் நடத்தினோம், மக்கள் மீது அல்ல என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

நேற்று இரவு, அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில், எங்களது படை ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கும் முக்கிய நோக்கத்தில், அந்நாட்டில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்களான போர்டியோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது நள்ளிரவில் ஒரு துல்லியமான தாக்குதலை நடத்தியது. இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். இந்த நடவடிக்கை ஈரானிய துருப்புக்களையோ அல்லது ஈரானிய மக்களையோ குறிவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பீட் ஹெக்செத் கூறினார்.

Advertisement