தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் பாதிப்பு; விலையை குறைத்ததால் விவசாயிகள்

குஜிலியம்பாறை: கிராமப்புறங்களில் பால் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 3 குறைத்துள்ளதால், விவசாயிகள் கட்டுபடி இல்லாத விலையென்ற குமுறலில் உள்ளனர். தமிழக அரசு, ஆவின் கொள்முதல் நிலையங்களை ஊராட்சிகளில் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. சமீப காலமாக விவசாய உற்பத்தியில், வெங்காயம், மிளகாய், கத்தரி, தக்காளி, மா உள்ளிட்ட பொருட்களுக்கு போதிய விலை இல்லாத நிலையில், விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்பதும் நஷ்டத்தை சந்திப்பதும் வாடிக்கையாகவே உள்ளது.

இதனால்தான் எடுக்கின்ற கூலிகூட கட்டாது என காட்டிலேயே உற்பத்தி பொருட்களை எடுக்காமலும், அப்படியே எடுத்தாலும் ரோட்டோரம் கொட்டி விடுவதும் உண்டு.

இப்படி விவசாயத்தில் வெறுப்படைந்த விவசாயிகள், மாற்றுத் தொழிலாக கால்நடை வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தனர். ஒரு லிட்டர் பசும்பால் ரூ.35 முதல் ரூ.38 வரை எடுத்தனர். அதேபோல் எருமை பால் ஒரு லிட்டர் ரூ.50 முதல் ரூ.60 வரை, கொழுப்பு சத்தை பொறுத்து, டெஸ்ட் கணக்கீட்டின்படி வழங்கி வந்தனர்.

இந்நிலையில் தற்போது பால் உற்பத்தி அதிகரித்த நிலையில், தனியார் பால் நிறுவனங்கள், பசும்பாலுக்கு மட்டும் ரூ.3 குறைத்துள்ளனர். இதனால் கறவை மாட்டை வளர்த்து, தீவனங்கள், கலப்பு தீவனங்களை வாங்கி பாலை கறந்து ஊற்றினாலும், கட்டுபடியாகாத நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் திண்டுக்கல் மாவட்டத்தில், ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் ஊராட்சி வாரியாக இல்லாததும், தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களே அதிகரித்திருப்பதும் தான் என்கின்றனர்.

Advertisement