வேலுார் பென்லேன்ட் மருத்துவமனையை நாளை மறுநாள் திறக்கிறார் முதல்வர்; டாக்டர், நர்ஸ் நியமனம் இன்றி 'மல்டி ஸ்பெஷாலிட்டி' எப்படி?

வேலுார்: வேலுார் மாநகரின் மையப்பகுதியில், 1882ல் பென்லேன்ட் அரசு மருத்துவமனை துவங்கப்பட்டு, 1915ல் மேம்படுத்தப்பட்டது.
வேலுாரை அடுத்த அடுக்கம்பாறையில் அரசு மருத்துவ கல்லுாரி, 2005ல் துவங்கப்பட்டது. இதனால், இந்த மருத்துவமனை அதனுடன் இணைக்கப்பட்டு செயல்படுகிறது.தற்போது, இந்த பென்லேன்ட் மருத்துவமனை, அவசர சிகிச்சை மற்றும் புற நோயாளிகள் பிரிவாக செயல்பட்டு வரும் நிலையில், 2023ல், 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக கட்டப்படும் என, அரசு அறிவித்தது.
அதன்படி, 4 லட்சம் சதுரடியில், ஏழு மாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இருதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் உட்பட, 10 துறையை சேர்ந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டிகள் இங்கு உள்ளன. 10 அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர மற்றும் விபத்து தொடர்பான வழக்குகளுக்கு தனி வார்டுகள், புற்றுநோய் சிகிச்சை, மயக்க மருந்து மற்றும் எக்ஸ்ரே அறையும் கட்டப்பட்டுள்ளது.
முன்வராத மருத்துவர்கள்
இதற்காக, 300க்கும் மேற்பட்ட டாக்டர் மற்றும் நர்ஸ், இதர பணியாளர்கள் என, 700க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை ஒரு பணியிடம் கூட புதிதாக நியமிக்கவில்லை. இந்நிலையில், வேலுாருக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், இம்மருத்துவமனையை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார்.
இங்கு பணிபுரிய மல்டி ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் யாரும் முன்வராததால், வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத்துறையை இங்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுஉள்ளனர்.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில், மாதத்திற்கு 850 பிரசவங்கள் நடக்கின்றன. அங்கு, 50 டாக்டர்கள் தேவை. தற்போது, 31 பணியிடங்கள் தான் உள்ளன. அதிலும், எட்டு டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் தற்போது பணியில் உள்ள டாக்டர்கள் கடும் பணிச்சுமையில், மன உளைச்சலில் உள்ளனர்.
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள்பிள்ளை கூறியதாவது:பிரமாண்ட கட்டடங்களை உருவாக்குவதே சிறந்த சுகாதார கட்டமைப்பு என, தமிழக அரசு நினைக்கிறது; அது முற்றிலும் தவறு. நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர், நர்ஸ் பணியிடங்களை நிரப்புவது மிகமிக அவசியம்.
பணியாளர்கள் இல்லை
புதிதாக மேம்படுத்தி கட்டப்பட்ட சேலம், திருநெல்வேலி, கிண்டி போன்ற அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர், நர்ஸ் உட்பட பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
-
கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி