ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்த்த 4 பேரை விசாரிக்க காவலில் எடுக்கிறது என்.ஐ.ஏ.,

2

சென்னை: ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்க்க, பெரும் தொழில் அதிபர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். இதன் விபரங்களை அறிய, கைதான நான்கு பேரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

கடந்த, 2022ல், கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், அதே பகுதியை சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின், 29, பலியானார்.

இச்சம்பவம் குறித்து என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் இரு தினங்களுக்கு முன், ஜமேஷா முபின் கூட்டாளிகளான, கோவை போத்தனுாரை சேர்ந்த அகமது அலி,48, உக்கடத்தை சேர்ந்த ஜவஹர் சாதிக், 48, சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ேஷக் தாவூத், 47, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ராஜா, 38 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

இவர்களில், ேஷக் தாவூத் திருச்சியிலும், அப்துல்லா ராஜா திண்டுக்கல் மாவட்டத்திலும், அரபிக் கல்லுாரி கிளைகள் துவங்கி நடத்தி வந்துள்ளனர். கைதான நால்வரும், ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்த்து, அரபிக் கல்லுாரியில் பயங்கரவாத பயிற்சி அளித்து, தற்கொலை படைகளை உருவாக்கியுள்ளனர்.

இது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கனவே, ஜமீல் பாஷா என்பவர் கைதாகி உள்ளார். இவர் தான், கோவை அரபிக் கல்லுாரியை துவக்கியவர். ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்த்து, பயங்கரவாத பயிற்சி அளித்தவரில் முக்கியமான நபர்.

ஜமீல் பாஷாவின் வலது கரமாக ஜமேஷா முபின் செயல்பட்டு வந்துள்ளார். தற்போது கைதான நால்வரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தோம்.

அதில், சந்தேகமான பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்த போது, தொழில் அதிபர்கள் பின்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க, நான்கு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement