இடத்தை விற்பதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது

எம்.கே.பி.நகர்,:சென்னை கொடுங்கையூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் லட்சுமிபிரியா, 49. இவர், தான் குடியிருக்கும் வீட்டின் அருகே உள்ள 1,000 சதுரடி நிலத்தை வாங்க விரும்பினார்.

இதற்காக, தனக்கு அறிமுகமான திருமால், சங்கர் ஆகிய இரண்டு இடைத்தரகர்கள் வாயிலாக, இடத்தின் உரிமையாளரான பிரித்விராஜ் கடேல் என்பவரிடம் பேசினார்.

நிலத்திற்கு 1.03 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்து, 2024 மே 7ல், வியாசர்பாடி, எம்.கே.பி.நகரில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் வைத்து, லட்சுமிபிரியா முன்பணமாக, ஐந்து லட்ச ரூபாயை, பிரித்விராஜ் கடேலிடம் கொடுத்து, கிரைய அட்வான்ஸ் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

பின், லட்சுமிபிரியா காலிமனையை நில அளவையர் வைத்து அளந்தபோது, 965 சதுர அடி மட்டுமே உள்ளதும், அரசால் அங்கீகரிக்கப்படாத நிலம் என்பதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி பிரியா, பிரித்விராஜ் கடேலிடம் தான் கொடுத்த ஐந்து லட்சம் ரூபாயை திரும்ப கேட்டபோது, பிரித்விராஜ் கடேல் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுகுறித்து, எம்.கே.பி நகர் போலீசில், லட்சுமி பிரியா புகார் கொடுத்தார். போலீசார் மோசடி பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பிரித்விராஜ் கடேல், 51, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்த கார், கையடக்க கணினி, மூன்று மொபைல்போன்கள், 3 கிராம் தங்க தோடு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement