ம.தி.மு.க.,வுக்கு கூடுதல் சீட் கேட்போம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் ஈரோட்டில் வைகோ உறுதி

ஈரோடு: 'தி.மு.க., கூட்டணியில், 10 தொகுதிகள் வரை கேட்போம். ஆனால், ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. கட்சியின் அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுச்செயலர் வைகோ, முதன்மை செயலர் துரை வைகோ இருவருக்கும் ஆளுயர ரோஜா மாலை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
ம.தி.மு.க., எப்போதும் மக்களுக்கான இயக்கமாகவே இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், பலமுறை பிரதமரை சந்தித்து விளக்கினேன். உச்ச நீதிமன்றத்தில், 'அணை பலமாக உள்ளது; உடைக்க தேவையில்லை' என தீர்ப்பை பெற்றோம். 18 ஆண்டுகளாக, ஐந்து உண்ணாவிரதம், மூன்று மறியல், இரண்டு நடைபயணம் என போராடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடினோம். ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களிலும் போராடுகிறோம்.
ஒரு கட்சிக்கு இரண்டு எம்.பி.,க்கள் இருந்தாலே, அக்கட்சிக்கு அங்கீகாரம் வழங்கலாம் என்ற விதியை கொண்டு வர நானே காரணம்.
அதனால்தான் இன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்றுள்ளது. 2019 லோக்சபா தேர்தலில், ஈரோட்டில் ம.தி.மு.க.,வின் கணேசமூர்த்திக்கு மட்டுமே ஒரு சீட் வழங்கப்பட்டது.
அப்போது, எனக்கு சிவகாசியில் வாய்ப்பு வழங்கக் கோரினோம். அப்படி செய்து இருந்தால், அங்கு நானும் வெற்றி பெற்றிருப்பேன். கூடவே, தேர்தல் கமிஷன் அங்கீகாரமும் பெற்றிருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்குழுவுக்கு பின், வைகோ அளித்த பேட்டி: தமிழ் கடவுளாக போற்றப்படும் முருக பெருமான் அனைவருக்கும் சொந்தமானவர். கடவுளின் பெயரால் நடத்தும், எந்த மாநாடும் தவறானது. மதுரையில் நடந்த முருகனுக்கான மாநாட்டை, பா.ஜ., தான் பின்னால் நின்று நடத்தி இருக்கிறது. ஹிந்துக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காகவே, பா.ஜ., இப்படியெல்லாம் செய்கிறது. ஆனால், அதெல்லாம் நடக்காது.கட்சிக்கு ஆறு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால், தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்கும். அதற்காக, 6, 8, 10 என முடிந்த வரை 2026 சட்டசபை தேர்தலில் கூடுதல் சீட் கேட்போம். அதேநேரம், கூட்டணியில் இருப்பதால் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். நாங்கள் தி.மு.க., கூட்டணியில் உள்ளோம். வேறு எந்த கூட்டணியுடனும் பேசவில்லை; அதை பற்றியும் நாங்கள் சிந்திக்கவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பொதுக்குழுவில், தி.மு.க., அரசை கண்டிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், 'கடந்த 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்பின், ஒரு கடையை கூட மூடவில்லை. அதேநேரம், 'எப்.எல்.,-2 மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் 1,000க்கும் மேற்பட்ட உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சிவகாசி அருகே, விஸ்வநத்தம் கிராமத்தில், 'மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் மதுபான விற்பனை நடப்பதாக நீதிமன்றமே தெரிவித்துள்ளது. புற்றீசலாய் முளைத்துள்ள மனமகிழ் மன்ற உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். 'தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகம். ஆனால், ஆசிரியர்கள் எண்ணிக்கை, தனியார் பள்ளிகளில் அதிகம். 34 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், குறைகளை சுட்டிக்காட்டி, தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கை அளித்துள்ளது' என கூறப்பட்டுள்ளது.

மேலும்
-
அரசு மருத்துவமனையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
-
ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!
-
தக்கைப் பூண்டு விதை விலை உயர்வால் விவசாயிகள் அவதி
-
திருப்புவனத்தில் பார் ஆக மாறும் அரசு அலுவலகம்