வேளச்சேரி - தரமணி ரயில்வே சாலையில் போலீசார் இல்லாததால் தொடரும் நெரிசல்

தரமணி:வேளச்சேரி - தரமணி ரயில்வே சாலை, 2.5 கி.மீ., துாரம் கொண்டது. வேளச்சேரி, ஆதம்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதியை சேர்ந்தோர், ரயில்வே சாலையை பயன்படுத்தி, ஓ.எம்.ஆர்., திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இதனால், இந்த சாலையில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். பெருங்குடி ரயில் நிலையம் அருகில், தண்டவாளத்தின் கீழ் பகுதியில், நான்கு முனை சந்திப்பு உள்ளது.

இங்கு, பீக் ஹவர்ஸ் நேரங்களில், நான்கு திசையில் இருந்தும் அதிகமாக வாகனங்கள் வருவதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சில நாட்கள், அரை மணி நேரம் வரை வாகனங்கள் நகராமல் ஒரே இடத்தில் நிற்கின்றன. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். மேலும், மருத்துவ சிகிச்சைக்கு அவசரமாக செல்வோர், நெரிசலில் சிக்கிக்கொள்கின்றனர்.

இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

பிரதான சாலைகளை போல், வேளச்சேரி - தரமணி ரயில்வே சாலையில், வாகனங்கள் செல்கின்றன. இங்கு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னலும் இல்லை.

போக்குவரத்து போலீசாரும் நிற்பதில்லை. பக்கவாட்டில் உள்ள வடிகால்வாய்களும் உள்வாங்கி உள்ளதால், அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே, அப்பகுதியில் போலீசார் நியமித்து, வாகன நெரிசலை தடுக்கவும், சாலையை சீரமைக்கவும், மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement