திருப்பரங்குன்றத்துக்கு பிரச்னை எனில் சூரசம்ஹாரம் செய்வோம்: அண்ணாமலை

மாநாட்டில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

ஒரு இனம் தன் குரலை ஓங்கி ஒலிக்கிறது. தன் உரிமையை மீட்க ஒன்று கூடியுள்ளது. உலகில் யூதர்கள் 0.2 சதவீதம் மட்டுமே உள்ளனர். அவர்கள் நான்கு நாடுகளுடன் சண்டையிடுகின்றனர். வாழ்வியல் முறைக்கு தொந்தரவு செய்தால் எழுந்து நிற்போம் என இஸ்ரேல் உள்ளது.

இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை சிலருக்கு பிரச்னை. ஹிந்து என்பதற்காக தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர். ஹிந்துக்களிடம் ஒற்றுமை கிடையாது என்ற தைரியத்துடன் பழைய அரசியல் செய்கின்றனர்.

இந்த மாநாடு அதுபோன்றவர்களுக்கு எச்சரிக்கை மணியாகும். அறுபடை வீடுகளுக்கு ஒவ்வொரு தனித்துவம் உள்ளது. ஆளும் ஆட்சியாளர்களுக்கு, அவர்களை எந்த வீட்டில் வைத்து பார்க்க வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்தவே இந்த மாநாடு. முதல்படை வீடான திருப்பரங்குன்றத்திற்கே பிரச்னை எனில், சூரசம்ஹாரம் செய்து விட்டு அமைதியாக திருத்தணியில் அமர்வோம்.

தமிழகத்தில் ஹிந்துக்களுக்கும், ஹிந்துக்களை சாராதவர்களுக்கும் எனத் தனித்தனி சட்டம் உள்ளது. இந்த மாநாட்டிற்கும் 2026 தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்றாலும், எனக்கு தெரியும், 2026 தேர்தலில் நிதி வேண்டாம், சுவாமி வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர்.

ஹிந்துக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அனைவரும் தட்டிக்கேட்க வேண்டும். கோவில்களில் ஹிந்து அறநிலையத்துறை ஒழுக்கமாக நடக்கவில்லை. மாற்று மதத்திற்கு சென்றவர்களை மீண்டும் ஹிந்து மதத்திற்கு கொண்டு வர வேண்டும்.

பழமையான தமிழகத்தில் வாழ்க்கை முறை மாறாமல் தமிழர்கள் இருந்து வருகின்றனர். இதற்கு காரணம் கோவில்களை சார்ந்து தமிழ் கலாசாரம் இருப்பதால் தான். ஆனால் அரசியல்வாதிகள் வாழவிடமாட்டார்கள்.

நம் குழந்தைகள் அமைதியாக வெளியே செல்ல வேண்டும். வடமாநிலங்களில் குழந்தைகள் தைரியமாக ருத்ராட்சம் அணிந்து வெளியே செல்கின்றனர்.

கந்த சஷ்டி கவசம் முருகனுக்கானது. அதை பாடுவதிலும் விஞ்ஞானம் உள்ளது. எனவே சஷ்டி நாளில், கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும்.

சமீபத்தில் திருப்பரங்குன்றத்தில் சுவாமி கும்பிட்டு விட்டு, திருநீறை அழித்து, செல்பி எடுத்த ஒரு கட்சி தலைவர் 2026ல் ஹிந்துக்களிடம் ஓட்டு பிச்சை எடுக்க வருவார்.

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பின், தமிழக அரசியலில், மாநாட்டிற்கு முன், மாநாட்டிற்கு பின்' என்ற நிலை இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement