சட்ட பயிற்சி மைய நிறுவனர் மீது பாலியல் வழக்கு பதிவு

வேளச்சேரி:வேளச்சேரி, அம்பிகா தெருவில் வழக்கறிஞர் சந்திரசேகர், 50, என்பவர் 'சந்துரு லா அகாடமி' என்ற பெயரில், நீதிபதிக்கான போட்டித் தேர்வுக்கு பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

இவர் மீது, அம்மையத்தில் படிக்கும், 23 வயது மாணவி, வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்னை தனியாக அழைத்த சந்திரசேகர், தகாத வார்த்தையில் பேசி, 'கார் அனுப்புகிறேன், இரவு அலுவலகத்திற்கு தனியாக வா' என அழைத்தார். அதற்கு நான் மறுத்ததால், அனைவர் முன்னிலையிலும் ஒருமையில் பேசினார்.

'மையத்தில் இருந்து நின்று விடுகிறேன்; பயிற்சி கட்டணத்தை திரும்ப தாருங்கள்' என கேட்டபோது, வழக்கறிஞர் பதிவை ரத்து செய்வதாக மிரட்டுகிறார்.

மேலும் பல மாணவியரிடம் பாலியல் ரீதியாக அழைப்பு விடுத்து, மிரட்டி வருகிறார். அவர் மீதும், அவருக்கு துணையாக இருக்கும் அலுவலக உதவியாளர் மாயா, 35, மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி விசாரித்த போலீசார், சந்திரசேகர், மாயா ஆகியோர் மீது, பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடுகின்றனர்.

Advertisement