ரயிலில் ஐ.டி., ஊழியரிடம் போன் பறித்த வாலிபர் கைது

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவேஷ், 25. இவர், பொத்தேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இதற்காக, காஞ்சிபுரத்தில் இருந்து பொத்தேரிக்கு ரயிலில் பயணம் செய்து வருகிறார்.

கடந்த மாதம், 26ம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து ரயிலில் பொத்தேரிக்குச் சென்றபோது, பரனுார் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட போது, மர்ம நபர் திவேஷிடம் இருந்த, 30,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை பறித்து தப்பினார்.

அவரை பிடிக்க, ஓடும் ரயிலில் இருந்து திவேஷ் கீழே குதித்தார். அப்போது தவறி விழுந்ததில், தலையின் பின் பகுதியில் அடிபட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்தார். ரயில்வே போலீசார் அவரை மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து, செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரித்தனர். இதில், செயின் பறிப்பு குற்றவாளி, உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அமீன் அலி, 18, என தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை அமைத்து, உ.பி., மாநிலத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். விசாரணையில், அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இங்குள்ள ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், புலிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பதுங்கி இருந்த அமீன் அலியை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து, திவேஷிடம் பறித்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

Advertisement