கர்நாடகாவில் தொடர் கனமழை மேட்டூருக்கு கூடுதல் நீர்வரத்து

சென்னை: கர்நாடகாவில் தொடர் மழையால், நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணையில் கூடுதல் நீர் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி துவங்கி உள்ளது.

இதற்காக, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு, 12ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருவதால், அங்குள்ள ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பி வரும் நிலையில், அவற்றில் இருந்து அதிகளவில் நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால், பிலிகுண்டுலு நீரளவை தளத்தை கடந்து, தமிழக எல்லைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 21,628 கன அடிக்கு மேல் நீர் வரத்து கிடைத்தது.

அணையில் இருந்து குறுவை பாசனத்திற்கு, 16,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாசன நீர் திறப்பை அதிகரிக்க நீர்வளத்துறை முடிவெடுத்து உள்ளது. தஞ்சாவூர் கல்லணையில் இருந்து, கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளது.

Advertisement