மருத்துவம் அல்லாத படிப்புகளுக்கு மெரிட் லிஸ்ட் ... ரெடி; ஓரிரு நாட்களில் வெளியிட சென்டாக் முடிவு

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள அனைத்து படிப்புகளுக்கு சென்டாக் மூலம் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை நடந்து வருகின்றது.

மருத்துவம் அல்லாத படிப்புகளுக்கு கடந்த மே மாதம் 12ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

விண்ணப்பிக்க பதிவு செய்திருந்த 15,993 பேரில் 13,526 பேர் கல்வி சான்றிதழ்களை சமர்பித்து விண்ணப்பித்துள்ளனர். பிராந்திய ரீதியாக பார்க்கும்போது புதுச்சேரி 11,071, பிற மாநிலங்களில் இருந்து 2448, என்.ஆர்.ஐ., 2 என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு 6 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்பங்களை அனைத்தும் கடந்த இருவாரமாக தீவிர தணிக்கை செய்யப்பட்ட சூழ்நிலையில் மெரிட் லிஸ்ட் தயாரிப்பு பணி முடிந்துவிட்டது.

பொது, இ.டபுள்யூ.எஸ்., எம்.பி.சி., ஓ.பி.சி., முஸ்லீம், மீனவர், எஸ்.சி., எஸ்.டி., விளையாட்டு வீரர், மாற்றுதிறனாளி, முன்னாள் ராணுவ வீரர் என இட ஒதுக்கீடு வாரியாக மெரிட் தயாரிப்பும் முடிந்துவிட்டது.

எனவே ஒரிரு தினங்களில் மருத்துவம் அல்லாத அனைத்து படிப்புக்களுக்கும் மெரிட் லிஸ்ட் வெளியிட சென்டாக் முடிவு செய்துள்ளது.மெரிட் லிஸ்ட் வெளியான பிறகு மாணவர்கள் தங்களது பிழைகளை திருத்தி கொள்ளவும்,. புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை கொடுக்கவும், ஒரு வாரம் கால அவகாசம் கொடுக்கவும் சென்டாக் திட்டமிட்டுள்ளது. இந்த ஆட்சேபனைகளை பரிசீலனை செய்த பிறகு செம்மைப்படுத்தப்பட்ட மெரிட் பட்டியல் மீண்டும் வெளியிடப்பட உள்ளது.

அதன் பிறகு மருத்துவம் இல்லாத படிப்புகளுக்கான உத்தேச பட்டியல், இறுதி பட்டியல் அடுத்தடுத்து வெளியாகி ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள் துவங்கும்.

குறைகளை இதுல சொல்லுங்க



மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுகின்றன. குறைகளை சொல்லி தீர்வுகளையும் தேடுகின்றனர்.

அனைத்து குறைகளுக்கும் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்திற்கு சென்று மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக சென்டாக் விண்ணப்ப டேஷ்போர்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களுடைய லாகின் மூலம் இந்த டேஷ்போர்டுக்கு சென்று, கிரிவன்ஸ் பகுதியை தேர்வு செய்து, குறைகளை தெரிவிக்க முடியும்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் உங்களுடைய குறைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதே நேரத்தில் இந்த லிங்க் வழியாக எந்த சான்றிதழை பதிவேற்றம் செய்ய முடியாது என சென்டாக் அறிவித்துள்ளது.

எவ்வளவு சீட்டுகள்



பி.டெக்., உள்ளிட்ட மருத்துவம் அல்லாத படிப்புகளுக்கு 13,526 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள சூழ்நிலையில் சீட்கள் குறைவாக தான் உள்ளன.

நீட் அல்லாத தொழில்முறை பாடங்களில் 6,257 சீட்டுகள், கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளில் 4,320 என மொத்தம் 10,577 சீட்டுகள் இந்தாண்டு நிரப்பப் பட உள்ளது குறிப்பிடதக்கது.

தெரிந்து கொள்ளுவது

மருத்துவ படிப்புகளுக்கான மெரிட் லிஸ்ட் https://www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். அத்துடன் விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் கொடுத்த மொபைல் எண்ணிலும் எஸ்.எம்.எஸ்., வந்து பளீச்சிடும். ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள் துவங்கி, சீட் ஒதுக்கப்பட்டதால் மாணவர்களின் டேஷ்போர்டில் கல்லுாரி சேர்க்கைக்கான அனுமதி கடிதம் கிடைக்கும். அதனை டவுண்லோடு செய்துக்கொண்டு சீட் கிடைத்த கல்லுாரியில் நேரில் சேரலாம்.

Advertisement