இடுக்கியில் தெருநாய்கள் இம்சை 6 மாதங்களில் 3,379 பேருக்கு கடி

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில், ஆறு மாதத்தில் தெருநாய்கள், 3,379 பேரை கடித்ததாக சுகாதாரத்துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறில், கடந்த மாதம் சுற்றுலா பயணியர் உட்பட, 16 பேரை தெரு நாய் கடித்தது.

ஆறு மாணவியர்



தேவிகுளத்தில், அரசு பள்ளி வளாகத்தில், கடந்த வாரம் ஆறு மாணவியரை நாய் கடித்தது.

இந்த மாதம், நேற்று முன்தினம் வரை, 333 பேரை தெருநாய்கள் கடித்த நிலையில், ஜன., 1 முதல் நேற்று முன்தினம் வரை, 3,379 பேரை நாய்கள் கடித்ததாக சுகாதார துறை கணக்கெடுப்பில் தெரியவந்தது.

தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், இடுக்கி தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஏ.பி.சி., மையங்கள் இருந்தன. மாநிலத்தில், 2022 முதல் இவை செயல்பட துவங்கின.

ஊராட்சிகள் தோறும் இவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பின், இரண்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு மையம் என, நிர்ணயிக்கப்பட்ட போதும் செயல்படுத்த முடியவில்லை. பின், 2023ல், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை பயன்படுத்தி, இடுக்கியில், மாவட்ட ஊராட்சி அளவில் ஏ.பி.சி., மையம் அமைக்க அரசு முடிவு செய்தது.

நிதி ஒதுக்கீடு



அதன்படி, குயிலிமலையில், மாவட்ட ஊராட்சி வழங்கிய 50 சென்ட் நிலத்தில் இந்த மையம் அமைக்க, 3.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், திட்டம் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. இதை விரைந்து முடித்தால் மட்டுமே, இடுக்கி மக்கள் தெருநாய்களிடம் இருந்து தப்ப முடியும்.

Advertisement