தண்ணீரே வராத ஊருக்கு சுத்திகரிப்பு நிலையம் எதுக்கு? அமைச்சரை வறுத்தெடுத்த முதியவர்

பெரம்பலுார்: தண்ணீர் வராத ஊருக்கு சுத்திகரிப்பு நிலையம் எதற்கு? என, அமைச்சரை முற்றுகையிட்டு முதியவர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலுார் மாவட்டம், வேப்பூர் யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேற்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

அப்போது, ஓலைப்பாடி கிராமத்தில் நடந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்ற அமைச்சரை, அதே ஊரை சேர்ந்த முதியவர் ஒருவர், 'தண்ணீரே வராத ஊருக்கு சுத்திகரிப்பு நிலையம் எதுக்கு?' என, சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உடனே அந்த முதியவரை சம்பவ இடத்திலிருந்து போலீசார் தரதரவென இழுத்துச் சென்றனர்.

இதையடுத்து, அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள், மூன்று மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களிடம், 'தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்து, அங்கிருந்து அமைச்சர் நகர்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement