குழாய் உடைப்பால் குடிநீர் வீண் சரி செய்வது அவசரம் அவசியம்!

புதர்மண்டிய பூங்கா



வீரகேரளம், 19வது வார்டு, அண்ணா நகர் ஹவுசிங் யூனிட் குழந்தைகள் பூங்கா போதிய பாராமரிப்பின்றி உள்ளது. விளையாட்டு சாதனங்களை சுற்றியும் புதர் செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. பூங்காவிற்கு வரும் குழந்தைகளுக்கு புதர்களில் மறைந்திருக்கும்பாம்பு, தேள் போன்றவற்றால் ஆபத்து உள்ளது.புதர்களை வெட்டி பூங்காவை சீராக பராமரிக்க வேண்டும்.

- பாலசுந்தரம், வீரகேரளம்.

தடுப்பணையில்நிரம்பும் குப்பை



தடாகம் ரோடு, கணுவாய் தடுப்பணையில் அதிகளவு குப்பைகள் கொட்டப்படுகிறது. குட்டி குப்பைகிடங்கு போல மலையளவுகுப்பை குவிந்துள்ளது.ஆங்காங்கே சிலர் குப்பையை தீயிட்டும் கொளுத்துகின்றனர். இந்த இடமே, கடும் துர்நாற்றத்துடன் கரும் புகையாக காட்சியளிக்கிறது. குப்பையை அகற்றுவதுடன், மீண்டும் கொட்டாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.

- சங்கர், கணுவாய்.

3. தெருவிளக்கு பழுது



இடையர்பாளையம், கோவில்மேடு, எட்டாவது வார்டு, 'எஸ்.பி - 39, பி- 45' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த மூன்று மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இரவு நேரங்களில் இப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

- பாபு, இடையர்பாளையம்.

வீணாகும் குடிநீர்



போத்தனுார், ஜி.டி.டேங்க் பகுதியில், குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. குடிநீர் வீணாக சாலையில் வெளியேறுவதால், தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.குழாய்உடைப்பு குறித்து புகார் செய்தும் நடவடிக்கையில்லை.

- பத்ரி, போத்தனுார்.

5. வாகனஓட்டிகளுக்கு இடையூறு



கவுண்டம்பாளையம், சேரன் நகரில், மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து நுழையும் இடத்தில் சாலையோரம் தள்ளுவண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வளைவில் திரும்பும் வாகனங்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் தள்ளுவண்டியை அகற்ற வேண்டும்.

- விவேகானந்தன், சேரன்நகர்.

புகார் செய்தும் பலனில்லை



உப்பிலிபாளையம், 60வது வார்டு, பிருந்தாவன் காலனி, முதலாவது வீதியில், 'எஸ்.பி - 30, பி -28' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தெருவிளக்குஎரியவில்லை. தெருவிளக்கு பழுது குறித்து பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையுமில்லை.

- வர்ஷா, உப்பிலிபாளையம்.

குழிகளால் அதிகரிக்கும் விபத்து



சத்தி ரோடு, கணபதி மூர் மார்க்கெட் அருகில் சாலையில் பெரிய குழி உள்ளது. கார், சரக்கு வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. பைக்கில் செல்வோர் குழியில் தடுமாறி விழுகின்றனர். இரவு நேரங்களில் அதிகளவு விபத்துகள் நடப்பதால், குழியை விரைந்து சரிசெய்ய வேண்டும்.

- சங்கர், கணபதி.

சேறும், சகதியுமான ரோடு



வெள்ளலுார், தேனீஸ்வரன் நகர் பகுதிக்கு தார் சாலை அமைத்து தர பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. சேறான சாலையில் அடிக்கடி வாகனங்கள் சிக்கிக்கொள்கின்றன. சமீபத்தில் பள்ளி வாகனம் சேற்றில் மாட்டிக்கொண்டது. நடந்து செல்வோரும், பைக்கில் செல்வோரும்வழுக்கி விழுகின்றனர்.

- பாலசுப்ரமணியன், வெள்ளலுார்.

இருளால் அச்சம்



மரக்கடை, 82வது வார்டு, திருமலை நகர் பகுதியில் உள்ள, ' எஸ்.பி - 47 பி-6' என்ற எண் கொண்ட கம்பத்தில் தெருவிளக்கு எரியவில்லை. கடந்த ஒரு மாதமாக புகார் செய்தும் நடவடிக்கையில்லை. இரவில் பணி முடிந்து வீட்டுக்கு வரும் பெண்கள், முதியவர்கள் அச்சத்திற்குள்ளாகின்றனர்.

- முகமத், மரக்கடை.

Advertisement