சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க பச்சமலை எஸ்டேட்டில் கூண்டு வைப்பு 

வால்பாறை : வால்பாறை அருகே, சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவு. இந்த எஸ்டேட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மெனோஜ்முண்டா அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களின் மகள் ரோஸ்குமாரி, 6. ஜூன் 20ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது, தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை கவ்விச்சென்றது.

சிறுத்தையிடம் இருந்து சிறுமியை மீட்க தொழிலாளர்கள் கூச்சலிட்டு விரட்டினர். ஆனால், சிறுத்தை மின்னல் வேகத்தில் மாயமானது.

இரவு நேரம் என்பதால் சிறுமியை தேட முடியாமல் தவித்தனர்.

நேற்று முன்தினம் காலை போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, வனத்துறையினர் இணைந்து சிறுமி தேடிய நிலையில், அவரது உடல் பிணமாக மீட்கப்பட்டது. அதன் பின் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதனிடையே சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வேண்டும் என தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் வனத்துறை சார்பில் பச்சமலை எஸ்டேட் பகுதியில் நேற்று கூண்டு வைக்கப்பட்டது.

Advertisement