தயாராகிறது ஆன்லைன் வினியோகிப்பாளர் பட்டியல் கண்காணிக்கிறது உணவு பாதுகாப்புத்துறை

ஆ ன்லைன் முறையில் அனைத்து பொருட்கள் மட்டுமல்ல, உணவுகளும் வீடுகளுக்கே தேடி வரும் இன்றைய சூழலில், இ- காமர்ஸ் முறையில் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள், தனிநபர்கள் பட்டியலை உணவு பாதுகாப்புத்துறை தொகுத்து வருகிறது.

உணவு பாதுகாப்புத்துறை சார்பில் கடந்த வாரங்களில் கேன் தண்ணீர் தயாரிப்பாளர்கள், வினியோகிப்பாளர்கள், சவர்மா மற்றும் துரித உணவு கடை உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. நாளை மறுநாள் சாலையோர வியாபாரிகளுக்கு ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் முகாம் நடைபெறவுள்ளது.

இதன் வாயிலாக, ஒவ்வொரு உணவு சார்ந்த பிரிவுகள் வாரியாக தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உரிமையாளர்கள், வினியோகிப்பாளர்கள் பட்டியல் மாவட்ட அளவில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது, இ-காமர்ஸ் முறையில் உணவு, உணவு சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், தனிநபர்கள் பட்டியல் தொகுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''இ-காமர்ஸ் உணவு நிறுவனங்களை கண்காணிக்க அறிவுறுத்தல்கள் வந்துள்ளன. பெரிய நிறுவனங்களின் கிடங்குகள் மட்டுமின்றி, வீட்டில் இருந்து தயாரித்து சோசியல் மீடியா உதவியுடன் விற்பனை செய்து வருபவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இ-காமர்ஸ் உணவு விற்பனையாளர்கள், உரிமையாளர்கள் அனைவரின் பட்டியலும் தயாரித்து வருகிறோம். சவர்மா கடை உரிமையாளர்கள், கேன் தண்ணீர் உரிமையாளர்கள், வினியோகிப்பாளர்கள் பட்டியல் தயார் செய்து வைத்துள்ளோம். இ-காமர்ஸ் முறையில் உணவு, பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் என விற்பனை செய்பவர்கள் அனைவரும் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்றவேண்டும். ஆய்வுகளின் போது குறைபாடுகள் இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement